​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவையில் 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற கார் மோதி ஒருவர் பலி... பெற்றோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு

Published : Jul 19, 2024 8:08 AM

கோவையில் 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற கார் மோதி ஒருவர் பலி... பெற்றோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு

Jul 19, 2024 8:08 AM

கோயம்புத்தூரில், ஓட்டுநர் உரிமம் பெறாத பிளஸ் டூ மாணவன் ஓட்டிச் சென்ற கார் மோதி வட மாநில தொழிலாளர் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் சிறுவனின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

செளரிபாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மோகன்ராஜ் என்பவரின் 17 வயது மகன், நள்ளிரவில், வீட்டில் அனைவரும் உறங்கியதும் தந்தையின் நிஸான் காரை எடுத்து ஓட்டியபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் அவினாசி சாலை அருகே இரவில் மேம்பால கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர் ஒருவர் மீது மோதிவிட்டு, பின் தடுப்பு சுவரில் மோதி தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது.

காருக்குள் இருந்தபடி கதறிய சிறுவனை, கட்டுமான பணியாளர்கள் கார் கண்ணாடியை உடைத்து மீட்டனர். கார் மோதி படுகாயமடைந்த வட மாநில தொழிலாளி அக் ஷை பெரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

18 வயது பூர்த்தியாகாத சிறுவர்கள் வாகனங்களை இயக்கினால் பெற்றோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.