​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காதலனை ஏவி கணவன் கொலை.. ஒரு மாதத்தில் 2 கொலை முயற்சி.. ஒரு முறை தோல்வி, மறு முறை கொலை..!

Published : May 10, 2022 7:29 AM



காதலனை ஏவி கணவன் கொலை.. ஒரு மாதத்தில் 2 கொலை முயற்சி.. ஒரு முறை தோல்வி, மறு முறை கொலை..!

May 10, 2022 7:29 AM

காதலனை ஏவிவிட்டு கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்த பெண், அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக நாடகமாடிய சம்பவம் தெலுங்கானாவில் அரங்கேறியுள்ளது. திருமணமான ஒரு மாதத்தில் இரண்டு முறை கணவனை கொலை செய்ய முயன்ற வில்லங்க மனைவி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு....

நிஜாம்பேட் பகுதியைச் சேர்ந்த சியாமளா பட்டதாரி பெண் ஆவர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு அமோகமாக திருமணம் நடைபெற்றுள்ளது. சியாமாளா ஏற்கனவே சிவா என்பவனை காதலித்து வந்த நிலையில், காதல் குறித்து வீட்டில் எதுவும் சொல்லாமல், இஷ்டம் இல்லாமலே சந்திரசேகரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால், திருமணத்திற்கு பிறகு சந்திரசேகர் உடனான குடும்ப வாழ்க்கையில் நாட்டம் இல்லாமல் இருந்த சியாமளா, கணவனை கொலை செய்து விட்டால், காதலனுடன் சேர்ந்து வாழலாம் விபரீதமாக யோசித்து, உணவில் எலிமருந்தை கலந்து கணவனுக்கு கொடுத்திருக்கிறார்.

உடல்நிலை பாதிக்கப்பட்ட சந்திரசேகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், சாப்பாட்டில் பாய்சன் கலந்த தனது சதித்திட்டத்தை மறைத்து, உணவு தான் பாயிசனாகிவிட்டதாக சப்ப கட்டுகட்டி சமாளித்திருக்கிறாள்.

முதல் முயற்சி மிஸ் ஆகிவிட்டதால், இரண்டாவது முறையாக கணவனை கொல்ல முடிவு செய்த சியாமளா, காதலனின் உதவியை நாடியதோடு, அதற்காக பலே திட்டம் தீட்டியிருக்கிறார். சம்பவத்தன்று சித்துபேட்டையிலுள்ள கோவிலுக்கு நேர்த்திக்கடன் இருப்பதாக கூறி கணவன் சந்திரசேகரை அழைத்துச் சென்றிருக்கிறார்.

அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி காதலன் சிவாவும், அவனது நண்பர்களும் காத்துக் கொண்டிருந்தனர். சந்திரசேகரனின் பைக்கை வழிமறித்த சிவா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரை அடித்து கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர், போலீசில் மாட்டிவிடக்கூடாது என்பதற்காக சந்திரசேகரனின் பெற்றோருக்கு போன் செய்த சியாமளா, கணவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, நடுரோட்டில் விழுந்து கிடப்பதாகவும், ரெம்ப பயமாக இருக்கிறது எனவும் கூறியிருக்கிறார். சிறிது நேரம் கழித்து மீண்டும் அழைத்து கணவர் இறந்துவிட்டதாக கூறிய சியாமளா, மருத்துவர்கள் விசாரித்த போதும் அதே மாதிரி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக கூறினார்.

ஆனாலும், சியாமளாவின் பேச்சில் தடுமாற்றத்தை உணர்ந்த சந்திரசேகர் குடும்பத்தினர் மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகாரளித்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதில் சந்திரசேகர் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்த நிலையில், போலீசார் மனைவி சியாமளாவிடம் விசாரித்த போது தான் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இதனையடுத்து, சியாமளா அவனது காதலன் சிவாவை கைது செய்த போலீசார், கொலைக்கு உடந்தையாக இருந்த சிவாவின் கூட்டாளிகளையும் கைது செய்தனர்.

மனமொத்து வாழமுடியவில்லை என்றால் சட்டப்படி பிரிவதே தீர்வாகும். அதைவிட்டுவிட்டு சியாமளா போன்று விபரீதமாக யோசித்தால் கடைசியில் காதலனுடனும் சேர்ந்து வாழ முடியாமல் போய் கம்பி எண்ணும் நிலை தான் வரும்..........