​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஈரானின் முக்கிய தளபதி கொல்லப்பட்டது குறித்து டிரம்ப் விளக்கம்...

Published : Jan 04, 2020 6:51 AM

ஈரானின் முக்கிய தளபதி கொல்லப்பட்டது குறித்து டிரம்ப் விளக்கம்...

Jan 04, 2020 6:51 AM

அமெரிக்க அதிகாரிகளை கொல்ல திட்டமிட்டதால் ஈரானின் தளபதி சுலைமானியை அமெரிக்க படையினர் கொன்றதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனிடையே இன்று அதிகாலை மீண்டும் அமெரிக்கப்படைகள் பாக்தாத்தில் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நீடிக்கிறது.

ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கப் படைகள் ஆளில்லா குட்டி விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் ஈரானின் புரட்சி பாதுகாப்பு படையின் குருதுஸ் பிரிவு தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு பழிவாங்குவோம் என ஈரான் தெரிவித்துள்ளதால், அமெரிக்கா-ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மியாமி நகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப்,  உலகின் முதன்மையான தீவிரவாதியான காசிம் சுலைமானியை தமது உத்தரவின் பேரில் அமெரிக்க படையினர் மிகச்சரியாக திட்டமிட்டு தாக்கி அழித்ததாக தெரிவித்தார்.

அமெரிக்க உயர் அதிகாரிகளைக் கொல்வதற்கு திட்டமிட்டதாகவும் கையும் களவுமாக சிக்கிய அவரை அமெரிக்க வீரர்கள் கொன்றதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஒரு போரை நிறுத்தவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், போரை தொடங்குவதற்காக அல்ல என்றும் டிரம்ப் தெரிவித்தார். ஈரானியர்கள் மீது மிகுந்த மதிப்பு உண்டு என்று குறிப்பிட்ட டிரம்ப், ஈரானின் கொடுங்கோன்மையும் அண்டை நாடுகள் மீது மறைமுக யுத்தம் தொடுக்கும் போக்கும் முடிவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனிடையே ஈராக்கில் இன்று அதிகாலை மீண்டும் அமெரிக்க படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆளில்லா குட்டி விமானம் மூலம் பாக்தாத் கிழக்கு பகுதியில் தீவிரவாத இயக்கத்தின் ராணுவ படையினரை குறி வைத்து தாக்குதல் நடைபெற்றது. இத்தாக்குதலில் 6 பேர் உயிரிழந்ததாக ஈராக் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.