​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆபாச வீடியோவால் ஆத்திரம் - சென்னை நபர் ஆந்திராவில் கொலை

Published : Jan 03, 2020 5:51 PM



ஆபாச வீடியோவால் ஆத்திரம் - சென்னை நபர் ஆந்திராவில் கொலை

Jan 03, 2020 5:51 PM

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் தன்னுடன் தவறான தொடர்பில் இருந்த நபரை கணவனுடன் சேர்ந்து கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டார். 

அனகாபுத்தூரைச் சேர்ந்த கார்த்திகேயனை கடந்த 18ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது குடும்பத்தார் போலீசில் புகாரளித்தனர். விசாரணையில் கார்த்திகேயனின் செல்போன் கடைசியாக ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே அணைக்கப்பட்டது தெரியவந்தது.

அந்த எண்ணுக்கு கடைசியாக வந்த அழைப்புகளை வைத்து, சித்தூரைச் சேர்ந்த சிவக்குமார் - மாதேஸ்வரி தம்பதியை மடக்கினர். சில மாதங்களுக்கு முன் அனகாபுத்தூரில் இருக்கும் தனது சகோதரர் வீட்டுக்கு சிவக்குமாரும் அவரது மனைவியும் வந்து 2 வாரங்கள் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளனர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயனுக்கும் மாதேஸ்வரிக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருவரும் தனிமையில் இருக்கும்போது எடுத்துக்கொண்ட வீடியோக்களைக் காட்டி, கார்த்திகேயன் மாதேஸ்வரியை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

வேலையை முடித்துக்கொண்டு சொந்த ஊரான ஆந்திரா சென்ற பிறகும் அடிக்கடி மாதேஸ்வரியை போனில் அழைத்து கார்த்திகேயன் தொல்லை செய்து வந்துள்ளார்.

இதனை முடிவுக்குக் கொண்டுவர எண்ணிய மாதேஸ்வரி, குளிக்கும்போது தனக்கே தெரியாமல் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு கார்த்திகேயன் தன்னை மிரட்டுவதாக கணவனிடம் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர், மாதேஸ்வரி மூலமே கார்த்திகேயனை தந்திரமாக சித்தூர் வரவழைத்தார். அங்கு மண்வெட்டியால் கார்த்திகேயனை தலையில் வெட்டி கொலை செய்து வீட்டின் பின்புறம் புதைத்துவிட்டதாக சிவக்குமார் வாக்குமூலம் கொடுத்ததாக போலீசார் கூறினர்.

இதனையடுத்து, சிவக்குமாரையும் மாதேஸ்வரியையும் கைது செய்த போலீசார், கார்த்திகேயனின் உடலை மீட்க ஆந்திரா விரைந்துள்ளனர்.