​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காதலுக்கு எச்சரிக்கை.. மாணவியின் சகோதரனை தாக்க சென்று பலியான கூட்டாளி..!

Published : Jul 09, 2024 7:47 AM



காதலுக்கு எச்சரிக்கை.. மாணவியின் சகோதரனை தாக்க சென்று பலியான கூட்டாளி..!

Jul 09, 2024 7:47 AM

திருச்சியில் கல்லூரி மாணவியை மறித்து காதலிக்க வற்புறுத்திய இருவரை மாணவியின் சகோதரர் எச்சரித்த நிலையில்,  அவரை அடிக்க ஆட்களை சேர்த்துக் கொண்டு சென்ற இடத்தில் லவ்வர் பாயின் கூட்டாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காதலுக்கு வக்காலத்து வாங்கச்சென்ற இடத்தில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இளைஞரின் உறவினர்கள் சாலையில் நின்று வயிற்றில் அடித்து ஒப்பாரிவைத்த காட்சிகள் தான் இவை..!

திருச்சி லால்குடி அகலங்க நல்லூரை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது சகோதரி கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது, திருவளர்ச்சோலையை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் மறித்துள்ளார். காதலிப்பதாக மாணவியிடம் கூறி உள்ளார். அவரது கூட்டாளியான ஜீவா, நாகேந்திரன் ரொம்ப நல்ல பையன் அவன திருமணம் செய்து கொள் என்று சிபாரிசு செய்துள்ளார்.

அந்த மாணவி இதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து தனது அண்ணனிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து அவர்களை இருவரையும் மாணவியின் சகோதரர் விக்னேஷ், அழைத்து கடுமையாக எச்சரித்து விரட்டி விட்டதாக கூறப்படுகின்றது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் சிறிது நேரம் கழித்து தனது ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு விக்னேஷை தாக்க சென்றுள்ளனர்.

அங்கு தனது நண்பர்களுடன் நின்ற விக்னேஷ் தரப்புக்கும் நாகேந்திரன் தரப்புக்கும் சண்டை நடந்துள்ளது இதில் நாகேந்திரன் தரப்பை சேர்ந்த நெப்போலியன் என்ற இளைஞருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. அவர் சம்பவ இடத்தில் பலியானதால் இந்த கொலைச் சம்பவம் குறித்து விக்னேஷ் உள்ளிட்ட 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்றுவரும் நாகேந்திரனை வேவு பார்க்க வந்த விக்னேஷின் ஆதரவாளர்கள் என கூறப்படும் இருவரை , எதிர் தரப்பினர் கல்லால் தாக்க முயன்றனர், போலீசார் அவர்களை பிடித்துச்சென்றனர்

இதற்கிடையே இளைஞர் நெப்போலியனின் உடலை வாங்க மறுத்த அவரது உறவினர்கள் ஒப்பாரி வைத்து அழுதவாறு சாலை மறியல் போராட்டத்திலும் குதித்தனர்

தன் மகனை கொலை செய்தவர்களை சும்மா விடமாட்டேன் என்று நெப்போலியனின் தந்தை ஆவேசமாக தெரிவித்தார்

கொல்லப்பட்டவர்களும், கொலையாளிகளும் இரு வேரு சாதிகள் என்பதால் பதற்றத்தை தணிக்க 500க்கும் மேற்பட்ட போலீசார் சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்