​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தாயின் ஆண் நண்பரோடு சேர்ந்து கணவனை கொன்ற மனைவி... தார்ப்பாயில் சுற்றி கிணற்றில் வீச்சு..!

Published : May 19, 2024 7:21 AM



தாயின் ஆண் நண்பரோடு சேர்ந்து கணவனை கொன்ற மனைவி... தார்ப்பாயில் சுற்றி கிணற்றில் வீச்சு..!

May 19, 2024 7:21 AM

திருப்பூரில், தாய்-தந்தையோடு சேர்ந்து கணவனை அடித்துக் கொலை செய்து சடலத்தை கிணற்றில் வீசி விட்டு ஓராண்டாக தேடுதல் நாடகம் நடத்தி வந்த மனைவியும் அவரது குடும்பத்தினரும் கூண்டோடு சிக்கியதன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

திருப்பூர் மாவட்டம் எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் 30 வயதான வடிவேல். கோழிகளை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டுனரான வடிவேல், கோவில்பாளையத்தைச் சேர்ந்த திவ்யாவை காதலித்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

தம்பதியருக்கு குழந்தை இல்லாத நிலையில், மது போதையில் திவ்யாவை வடிவேல் அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

கோவில்பாளையத்திலிருந்து வழக்கம் போல வேலைக்குச் சென்ற கணவர் வடிவேலை காணவில்லை என கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் திவ்யா.

வழக்கு பதிவு செய்து தேடிய நிலையிலும் வடிவேலை கண்டுபிடிக்க முடியாததால், அவரின் தாயார் வேலம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து, உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையை துக்கினர் போலீஸார்.

திவ்யாவின் செல்ஃபோன் தொடர்புகளை பரிசோதித்த தனிப்படையினர், வடிவேல் காணாமல் போன நாளில் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த பைனான்ஸியர் பாலாஜி என்பவருடன் திவ்யா அடிக்கடி பேசி வந்ததை கண்டுபிடித்தனர். பாலாஜி யார் என நடத்திய விசாரணையில் அவர் திவ்யாவின் தாயார் மரியாவின் ஆண் நண்பர் என்பது தெரிய வந்தது.

எனவே, பாலாஜியை பிடித்து வந்து மேற்கொண்ட விசாரணையில், வடிவேல் தனக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்து வைத்திருந்த 7 லட்சம் ரூபாயை திவ்யா குடும்பத்தினர் எடுத்து செலவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால், தம்பதியரிடையே அடிக்கடி தகராறு ஏற்படவே, இதனை பாலாஜியிடம் தெரிவித்துள்ளார் மரியாள்.

அடிக்கடி தகராறில் ஈடுபடும் வடிவேலை கொலை செய்ய திவ்யா அவரது அம்மா மரியாள், அப்பா தேவராஜ் மற்றும் பாலாஜி ஆகியோர் சேர்ந்து முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தனது நண்பர்கள் 3 பேரை வரவழைத்துள்ளார் பாலாஜி. வீட்டிற்கு வந்த வடிவேலுக்கு தென்னை மர மாத்திரை கொடுத்து அவர் மயங்கியதும் கட்டையால் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.

சடலத்தை தார்ப்பாயில் கட்டி கோவில்பாளையத்தில் ஒரு தோட்டத்து கிணற்றில் வீசி விட்டுச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

இரும்பு தொட்டில் கட்டி கிணற்றுக்குள் இறக்கி தார்ப்பாயால் சுற்றி கட்டப்பட்டிருந்த சடலத்தை மீட்டனர் போலீஸார். அழுகிய நிலையில் சடலம் மீட்கப்பட்டதால் அதே இடத்தில் வைத்து தடயங்களை சேகரித்து விட்டு உடற்கூராய்விற்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனையடுத்து, வடிவேலுவின் மனைவி திவ்யா, மாமியார் மரியா, மாமனார் தேவராஜ் மற்றும் பைனான்ஸியர் பாலாஜி அவரது நண்பர்களான கரூரைச் சேர்ந்த முத்து, உசிலம்பட்டியை சேர்ந்த பவுன்ராஜ், காட்டூரைச் சேர்ந்த தேவேந்திரன் ஆகிய 7 பேரையும்
கைது செய்தனர் போலீஸார்.

தனது மகனை கொன்ற அனைவருக்கும் உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டுமென கண்ணீரோடு கோரிக்கை வைத்துள்ளார் வடிவேலுவின் தாயார் வேலம்மாள்.

காணாமல் போனதாக தேடப்பட்டு வந்தவர் ஓராண்டிற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.