​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கண்முன்னே மகள் கொலை... கத்தியால் குத்தியவனை அடித்தே கொன்ற தாய்..!

Published : Apr 21, 2024 7:31 AM



கண்முன்னே மகள் கொலை... கத்தியால் குத்தியவனை அடித்தே கொன்ற தாய்..!

Apr 21, 2024 7:31 AM

பெங்களூரில் பூங்காவில் மகளை கத்தியால் குத்திக் கொன்றவனை, அந்த பெண்ணின் தாயார் அதே பூங்காவில் வைத்து கல்லால் அடித்தே கொன்ற சம்பவம் நிகழ்ந்தது.

 

கர்நாடகாவின் பெங்களூரு சாகம்பரி நகரைச் சேர்ந்தவர் 24 வயது இளம் பெண் அனுஷா. அவரது செல்ஃபோனுக்கு வந்த அழைப்பை தொடர்ந்து

ஜெயா நகரில் உள்ள பூங்காவிற்கு சென்று விட்டு 5 நிமிடத்தில் திரும்பி வருவதாக தாயார் கீதாவிடம் கூறிச்சென்றார் அனுஷா.
மகள் ஒருவித பதற்றத்துடன் காணப்படவே, அவரை பின்தொடர்ந்து தாய் கீதாவும் சென்றுள்ளார்

பூங்காவில், காத்திருந்த ஆண் ஒருவருடன் மகள் பேசிக் கொண்டிருப்பதை மறைவில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தார் தாய் கீதா.

திடீரென அந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மகளை குத்துவதையும் மகள் அலறலுடன் கீழே விழுவதையும் கண்டு பதறியபடியே மகளை நோக்கி ஓடினார் கீதா.

மகளின் நிலையைக் கண்டு பதறிய தாய், தாக்கியவன் தப்பி விடக் கூடாது என்பதற்காக அங்கு கிடந்த சிமென்ட் பலகையை எடுத்து வீசியதில், அவன் தலையில் அடிபட்டு கீழே விழுந்தான்.

ஆத்திரத்தோடு அந்த நபரை அடித்து கிடத்திவிட்டு, மகளை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார் கீதா

ஆனாலும், சிகிச்சை பலனின்றி அனுஷா இறந்து விட்டதாக தெரிவித்தனர் மருத்துவர்கள். தகவலறிந்த போலீஸார் பூங்காவிற்குச் சென்று பார்த்த போது காயமடைந்திருந்த அந்த நபரும் உயிரிழந்தது தெரிய வந்தது.

விசாரணையில் இறந்த நபர் கோரகுண்டேபாலயாவைச் சேர்ந்த சுரேஷ் என்பதும் ஈவென்ட்மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

அங்கு பணிபுரிந்த அனுஷாவிடம் நெருங்கி பழகிய அவர், தனக்கு திருமணமாகவில்லை எனவும் அனுஷாவை திருமணம் செய்துக் கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

ஒரு கட்டத்தில், சுரேஷிற்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பது தெரிய வரவே, அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார் அனுஷா.

5 ஆண்டு பழக்கம் பாதியில் நின்றதால் சமாதானம் பேசுவதற்காக பூங்காவிற்கு அழைத்து, அவரை கொலை செய்ததாக போலீஸார் தெரிவித்தனர் .