மக்களவை தேர்தல் முடியும் வரை காங்கிரஸிடம் இருந்து 3 ஆயிரத்து 567 கோடி ரூபாய் வரி பாக்கி, அபராதத்தை வசூலிக்க கட்டாய நடவடிக்கை எடுக்கப்படாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகள் நன்கொடையாக, 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாகப் பெறக்கூடாது என்பது மிக முக்கியமான விதி. அவ்விதியை மீறும் வகையில், கடந்த 2013லிருந்து 2019 வரை காங்கிரஸ் கட்சி ரொக்கமாக 626 கோடி ரூபாயை ஈட்டியதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளதாக வருமானவரித்துறை தரப்பில் கூறப்படுகிறது.
வருமான வரிச்சட்டத்தின் பிரிவு 13ஏ கீழ் ஒரு அரசியல்கட்சி பெறும் வருமானம் தொடர்பாக பல நிபந்தனைகளை அக்கட்சி பூர்த்தி செய்தால் மட்டுமே வருமானவரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த விதிகளையும் காங்கிரஸ் நிறைவேற்ற தவறிவிட்டதால், குறிப்பிட்ட நன்கொடைகளுக்கு வருமானவரி விலக்கு பெறும் சலுகையை இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி தாமதமாக வருமான கணக்கை தாக்கல் செய்தாகவும், பல ஆண்டுகளாக நடந்துவந்த வரி ஏய்ப்பை கண்டுபிடித்தும், மொத்தமாக வட்டியுடன் சேர்த்து 3 ஆயிரத்து 567 கோடி ரூபாய் செலுத்துமாறு வருமானவரித்துறை காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இப்படிப்பட்ட வலுவான ஆதாரங்கள் இருப்பதால்தான் காங்கிரஸால் நீதிமன்றத்தில் தடை பெறமுடியவில்லை என்றும் கூறப்படுகிறது.