ஒரு உறுதிமொழி அளித்தால் முழு பொறுப்புடன் அதனை நிறைவேற்ற செயலாற்றுவதே தமது வழக்கம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரசு துறைகளில் பணியமர்த்துவதற்காக ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் சுமார் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியை பிரதமர் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் 45 இடங்களில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் உரையாற்றிய அவர், நாட்டில் உணவுத்துறை முதல் மருந்து உற்பத்தி துறை வரையும் அனைத்து துறைகளும் வேகமாக வளர்ச்சி அடைவதாகவும், வரும் ஆண்டுகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.
துணை ராணுவப் படைகளுக்கான தேர்வுகள் 13 உள்ளூர் மொழிகளில் நடத்தப்படுவதாகவும், இதன் மூலம் லட்சக் கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், நாட்டின் வளர்ச்சியை வேகப்படும் வகையில் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 30 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.