கொடைக்கானல் அருகே வீட்டில் கேஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
ஆனந்தகிரி தெருவில், சுபாஸ் என்பவர் தனது மனைவி, ஒரு வயது குழந்தை மற்றும் அத்தை புவனேஸ்வரியுடன் வசித்து வருகிறார்.
நேற்றிரவு இவர்களின் வீட்டில் இருந்த கேஸ் அடுப்பு சரியாக மூடப்படவில்லை என கூறப்படுகின்றது.
இன்று அதிகாலையில் தேனீர் போடுவதற்காக சுபாஸின் அத்தை புவனேஸ்வரி கேஸ் அடுப்பினை பற்ற வைத்த போது திடிரென தீ பற்றி புவனேஸ்வரி மீது பற்றியதுடன் மற்ற அறைகளுக்கும் தீ மளமளவென பரவியது.
காலை வேளை என்பதால் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்த சுபாஸ், அனிதா, மற்றும் அவர்களது குழந்தை மீதும் தீ பற்றியது.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த குடியிருப்புவாசிகள் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து நால்வரையும் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்தனர்.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கும், புவனேஸ்வரிக்கும் 80 முதல் 90 சதவிகித தீக்காயமும் சுபாஸ் மற்றும் அவரது மனைவிக்கு 30 சதவிகித தீக்காயமும் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.