​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தந்தை தலையில் சத்தியம்.. விபரீத காதலுக்கு பெண் பலி.. வி.சி.க பிரமுகரிடம் விசாரணை..! ரூ.10 லட்சம் கேட்டு டார்ச்சர் என புகார்

Published : Aug 26, 2023 9:10 PM



தந்தை தலையில் சத்தியம்.. விபரீத காதலுக்கு பெண் பலி.. வி.சி.க பிரமுகரிடம் விசாரணை..! ரூ.10 லட்சம் கேட்டு டார்ச்சர் என புகார்

Aug 26, 2023 9:10 PM

சென்னையில் 5 வயதில் மகள் இருக்கும் நிலையில் 25 சவரன் நகைகளுடன் காதலித்த விசிக பிரமுகருடன் வீட்டை விட்டுச்சென்றப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விபரீத காதலில் விழுந்ததால் நிகழ்ந்த சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு....

அவன் நல்லவன் இல்லம்மா... என்று கெஞ்சிய தந்தையிடம் , இன்னும் ஒரு வாரத்தில் அவனை விட்டு வந்துவிடுவதாக தந்தையின் தலை மீது கைவைத்து சத்தியம் செய்த இந்த பெண் தான் நாடக காதலுக்கு பலியான பவித்ரா..!

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியை சேர்ந்த கோவிந்தராஜ் மகள் பவித்ரா. இவர் தனது கணவர் வீட்டில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது 5 வயது மகள் மற்றும் நகைப்பணத்துடன் மாயமான நிலையில் தைலாவரத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.

பவித்ராவின் தந்தை கோவிந்தராஜ் கூறும் போது , விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த தமிழ்வாணன், காதல் என்ற பெயரில் தனது மகளின் மனதை கெடுத்து அழைத்துச்சென்றதாகவும், தொழில் செய்வதாக கூறி பவித்ராவிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை வாங்கிய தமிழ்வாணன் 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு டார்ச்சர் செய்வதாகவும் தனது மகள் கூறியதாக தெரிவித்தார்.

மேலும் இன்னும் ஒரு வாரத்தில் தமிழ் வாணனை பிரிந்து உங்களுடன் வந்து விடுகிறேன் என்று தனது மகள் தலையில் அடித்து சத்தியம் செய்ததாக வீடியோ ஒன்றையும் போலீசாரிடம் வழங்கினார் கோவிந்தராஜ். பவித்ராவின் தந்தை கோவிந்தராஜ் அளித்த புகாரின் பேரில் பொத்தேரியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் தமிழ் வாணனை பிடித்து விசாரித்தனர்.

தற்கொலை செய்து கொண்ட பவித்ராவுக்கு விசிக பிரமுகர் தமிழ் வாணனுடன் திருமணத்துக்கு முன்பு காதல் இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் தமிழ்வாணனின் நடவடிக்கை பிடிக்காமல் விலகிய பவித்ராவை, அவரது தந்தை வண்ணாரபேட்டையில் உள்ள தனது உறவினர் மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். 5 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், இன்ஸ்டாகிராம் மற்றும் முக நூல் மூலம் மீண்டும் பவித்ராவுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட தமிழ்வாணன், வீட்டிற்கு தெரியாமல் பவித்ராவை வெளியே அழைத்துச்சென்றதாக கூறப்படுகின்றது.

இருவரும் நெருக்கமாக இருக்கும் செல்ஃபி புகைப்படங்களை பார்த்த பவித்ராவின் கணவர் சத்தம் போட்ட நிலையில் அடங்க மறுத்ததால், அவர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 5 வயது சிறுமியின் நலன் கருதி கணவன் வீட்டிலேயே பவித்ரா தங்கி இருந்தார். இரு மாதங்களுக்கு முன்பு வீட்டில் அனைவரும் கோவில் திருவிழாவுக்கு சென்ற நிலையில் வீட்டில் தனது மகளுடன் இருப்பதாக கூறிய பவித்ரா, வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு காதலன் தமிழ் வாணனை தேடிச்சென்றதாகவும் அவர் முதலில் பொத்தேரியில் தனி வீடு எடுத்து தங்க வைத்ததாகவும் கூறப்படுகின்றது. அதன் பின்னர் ஒரு வாரத்திற்கு முன்னர் தைலாவாரத்தில் வீடு எடுத்து தங்க வைத்த நிலையில் பவித்ரா தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே பவித்ரா தனது தற்கொலைக்கு காரணம் தமிழ்வாணன் தான் என்று குறிப்பிட்டு கடிதம் ஏதும் எழுதி வைக்கவில்லை என்பதால் விசாரணைக்கு கூப்பிட்டால் வரவேண்டும் என்ற நிபந்தனையுடன் அவரை விடுவித்தனர். விபரீத காதலில் விழுந்ததால் நல்ல வாழ்க்கையை இழந்து தங்கள் மகள் வாழ்க்கையையே முடித்துக் கொண்டதாக பெற்றோர் கண்ணீர் விட்டு வருகின்றனர்.