​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தாலியை பறித்து கோவில் உண்டியலில் போட முயன்ற மணமகள்

Published : Aug 22, 2023 11:21 AM



தாலியை பறித்து கோவில் உண்டியலில் போட முயன்ற மணமகள்

Aug 22, 2023 11:21 AM

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நடக்க இருந்த திருமணத்தின் போது மணப்பெண் தாலியைப் பறித்து உண்டியலில் போடமுயன்ற சம்பவத்தால் இருதரப்பு வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஆதியக்குடியைச் சேர்ந்த பாலுசாமி-சாரதாதேவி தம்பதியரின் மகன் சரவணன் என்பவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சின்னகீரமங்கலம் வத்தாப்பட்டியைச் சேர்ந்த கோவிந்தன் -வாசுகி தம்பதியரின் மகளான கிருஷ்ணபிரியா என்பவருக்கும் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பேசி முடிவு எடுத்து திருமண தேதி நிச்சயிக்கப்பட்டது.

இந்த நிலையில் இவர்களின் திருமணம் நேற்று நடைபெற இருந்த நிலையில், இரு குடும்பத்தினர் தரப்பிலும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் திருவாடானை அருள்மிகு ஆதி ரெத்தினேஸ்வரர் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

அங்கே இருவரும் திருமணம் செய்து கொள்ள ஏதுவாக கோயில் நிர்வாகத்தில் உள்ள திருமண பதிவேட்டில் மணபெண்ணும், மணமகனும் கையெழுத்து போட்டுள்ளனர். பின்னர் கோவிலில் திருமண ரசீதும் பெற்று கொண்டவுடன் திருமணத்திற்கு தயாரான இரு குடும்பத்திற்கும் அதிர்ச்சி தரும் வகையில் ஒரு சம்பவம் நடந்தேறியது.

இருதரப்பினரும் திருமண ஏற்பாடுகள் செய்திருந்த நிலையில் , திருமணம் நடத்துவதற்கு அனைத்து சடங்குகளும் முடிந்த நிலையில் மணமகன் மணமகளின் கழுத்தில் தாலி கட்ட முயன்றார். அப்போது மணப்பெண் தாலியை பறித்து தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை எனக்கூறி தாலியை கோயில் உண்டியலில் போட முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த இருவீட்டாரும் மணப்பெண்ணிடம் இருந்த தாலியை பிடிங்கி கட்டுமாறு மணமகனிடம் வற்புறுத்தினர். ஆனால் மணப்பெண்ணோ தொடர்ந்து திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த வண்ணம் இருந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து அங்கு வந்த திருவாடானை காவல் ஆய்வாளர் ஜெயபாண்டியன் இரு வீட்டாரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் மணப்பெண் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாத நிலையில் இந்த திருமணம் நின்று போனது.

இதனால் மணமகன் வீட்டார் தரப்பில் இருந்து திருவாடனை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலும் இதே போன்று சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கல்யாண தினத்தன்று மேக்கப் செய்ய பியூட்டி பார்லர் செல்வதாக கூறி முகூர்த்த நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பு வீட்டாரை நம்ப வைத்து ஏமாற்றி காதலனுடன் மணப்பெண் சென்றுவிட்டார். இதனால், முகூர்த்தத்திற்காக மண்டபத்தில் காத்திருந்த இருவீட்டாரும், உறவினர்களும், பெரும் கவலையில் ஆழ்ந்து, வீடு திரும்பினர்.