​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி அடுத்த கட்டமாக டெல்லியில் போராட்டம் நடைபெறும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published : Aug 21, 2023 6:31 AM

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி அடுத்த கட்டமாக டெல்லியில் போராட்டம் நடைபெறும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Aug 21, 2023 6:31 AM

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் நடைபெற்ற உண்ணாவிரதத்தை தொடர்ந்து, அடுத்த கட்டமாக டெல்லியில் போராட்டம் நடைபெறும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு விலக்குக் கோரி தி.மு.க.வின் இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவர் அணி இணைந்து மதுரை தவிர தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர். சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதத்தை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். முதலில், நீட் தேர்வால் உயிரிழந்த அனிதா முதல் ஜெகதீஷ்வரன் வரையிலான மாணவ, மாணவிகளின் நிழற்படங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். அப்போது நீட் தேர்வால் இறந்த மாணவ, மாணவிகள் பற்றிய வீடியோ ஒன்று திரை வைத்து ஒளிபரப்பட்டது. அதைப் பார்த்து உதயநிதி உள்ளிட்டோர் கண்கலங்கினர்.

திருமணம் முடிந்த கையோடு மணமாலையை கழுத்தில் அணிந்தபடி புதுமண ஜோடிகள் உண்ணாவிரத மேடைக்கு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். உண்ணாவிரதத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆதரவு தெரிவித்த அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை, உதயநிதிக்கு ஸ்டெத்தஸ்கோப் வழங்கினார்.

உண்ணாவிரதத்தில் நிறைவுரையாற்றி உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்திருப்பதாகவும், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் அது தான் என்றும் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உதயநிதி ஸ்டாலினுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.