​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனியார் கடல்சார் பல்கலைக் கழகத்தில் மாணவர் உயிரிழப்பு.. சக மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சம்மந்தப்பட்ட பயிற்சி அதிகாரி பணிநீக்கம்..!

Published : Aug 18, 2023 2:47 PM



தனியார் கடல்சார் பல்கலைக் கழகத்தில் மாணவர் உயிரிழப்பு.. சக மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சம்மந்தப்பட்ட பயிற்சி அதிகாரி பணிநீக்கம்..!

Aug 18, 2023 2:47 PM

சென்னை, கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள தனியார் கடல்சார் பல்கலைக் கழகத்தில் கடும் பயிற்சி அளிக்கப்பட்டதால் நான்காம் ஆண்டு மாணவர் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறி சக மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்மந்தப்பட்ட பயிற்சி அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டார்.

கல்லூரியில் நேற்று அதிகாலை மாணவர்களுக்கு கடல் சார் பயிற்சி வழக்கம் போல அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது பிரசாந்த் என்ற மாணவர் தன்னால் முடியவில்லை என்று கூறியும் பயிற்சி அதிகாரி புருஷோத்தமன் என்பவர் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது. பிரசாந்த் ரத்த வாந்தி எடுத்தும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அலட்சியம் காட்டியதாகவும் மாணவர்கள் கூறுகின்றனர். பிரசாந்த் தானே மருத்துவமனைக்கு செல்ல முற்பட்டபோதும் கேட் பாஸ் தராமல் தாமதம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. நெடு நேரத்துக்குப் பின மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரசாந்த், உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த சக மாணவர்கள் நேற்றிரவு ஈ.சி.ஆர். சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

பிரசாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது இறப்புக்கு ஏதோ ஒரு வகையில் தானும் காரணமாகி விட்டதாக புருஷோத்தமன் கல்லூரி நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்த நிலையில், அவரை பணிநீக்கம் செய்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.