பொள்ளாச்சி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை அடித்து கொலை செய்து புதைத்த நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பொள்ளாச்சி நேதாஜி சாலையைச் சேர்ந்தவர் அருண்கார்த்திக். இவர் கடந்த 10-ந்தேதி வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வராததால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இதையடுத்து அவரது நண்பர்கள் சூர்யபிரகாஷ், அரவிந்த் ஆகியோரிடம் விசாரணை நடத்திய போலீசார், அவர்களுக்கு தொடர்பில்லை என அனுப்பி விட்டனர். பின்னர் செல்பேசி சிக்னல் ஒரே இடத்தை காண்பித்ததை தொடர்ந்து மீண்டும் இருவரையும் அழைத்து உரிய முறையில் விசாரணை நடத்தினர். இதில் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக பேச வேண்டும் என அருண் கார்த்திக்கை அழைத்து சென்றதும் அப்போது மூவரும் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட அருண்கார்த்திக் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது உடலை அருகில் உள்ள கல்வகுவாரியின் கழிவுகளில் புதைத்ததாக இருவரும் தெரிவித்துள்ளனர். தற்போது மோப்பநாய் உதவியுடன் உடலை புதைத்த இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..