சென்னையில் 20 விழுக்காடு கட்டண சலுகையுடன் வாட்ஸ்ஆப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் வசதி நடைமுறைக்கு வந்துள்ளது.
பயணிகள் தங்களது வாட்ஸ் அப் எண்ணிலிருந்து "83000 86000" என்ற எண்ணுக்கு 'ஹாய்' என தகவல் அனுப்பினால் பயணச் சீட்டு, முன்பதிவு, மெட்ரோ நிலையங்களை கண்டுபிடித்தல் உள்ளிட்ட தேர்வுகள் கிடைக்கப்பெறும்.
அதில் பயணச்சீட்டு என்பதைத் தேர்ந்தெடுத்து, ஏதாவது ஒரு யூபிஐ செயலி மூலம் பணத்தை செலுத்தினால் உடனடியாக கியூ ஆர் கோடு அடங்கிய டிக்கெட் அனுப்பப்படும்.
திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் திட்டத்தை அறிமுகப்படுத்திய மெட்ரோ மேலாண் இயக்குனர் சித்திக், வாட்ஸ்ஆப் மூலமாக எடுக்கப்படும் டிக்கெட் ஒரு நாள் முழுவதும் செல்லும் என்றும் ஒரு முறை அந்த டிக்கெட்டை பயன்படுத்தி பயணம் மேற்கொண்டால் அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் அது காலாவதி ஆகிவிடும் என்றும் தெரிவித்தார். குறிப்பிட்ட நேரத்தை கடந்து பயணிப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் சித்திக் கூறினார்.