​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேக்கிறான், மேய்க்கிறான் நடிகையை ஏய்த்தது யார்? தீருமா பஞ்சாயத்து..?

Published : May 16, 2023 6:53 PM



கேக்கிறான், மேய்க்கிறான் நடிகையை ஏய்த்தது யார்? தீருமா பஞ்சாயத்து..?

May 16, 2023 6:53 PM

திருமண செயலியில் வரன் தேடிய கேக்கிறான், மேய்க்கிறான் பட நடிகை லுப்னா, தன்னை ஐடி ஊழியர் ஏமாற்றியதோடு தொடர்ந்து மிரட்டி வருவதாக புகார் தெரிவித்து காவல்நிலையத்திற்கும், நீதிமன்றத்திற்கும் அலைந்துக் கொண்டிருக்கிறார்.

கேக்கிறான் மேய்க்கிறான் திரைப்படம் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஷாயிதா லுப்னா கேத்ரி என்ற லுப்னா அமீர்.

வெப் சீரியஸ்களிலும் நடித்து வரும் லுப்னா திருமணத்திற்காக BETTA HALF என்ற மேட்ரிமோனியல் ஆப்பில் தனது சுய விபரங்களை பதிவு செய்துள்ளார். அதே செயலியில் வரன் தேடிய வியாசர்பாடியைச் சேர்ந்த ஐடி ஊழியரான மசியுல்லாகான், லுப்னாவைத் தொடர்புக் கொண்ட நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இதன்பின் இருவரும் ஒன்றாக சுற்றி வந்த நாட்களில் மசியுல்லாவிற்கு ஏற்கனவே திருமணமானதை தெரிந்துக் கொண்ட லுப்னா அவரை விட்டு விலக முடிவெடுத்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மசியுல்லா, இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தவறாக சித்தரித்து பல்வேறு ஆபாச இணையதங்களில் வெளியிட்டு வருவதாக திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் லுப்னா. புகாரின் பேரில் கைதான மசியுல்லா, சில நாட்கள் சிறையில் இருந்து விட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில், தன்னை லுப்னா அடியாட்களுடன் வந்து மிரட்டுவதாக மசியுல்லா கொடுத்த புகாரில் பெரவள்ளூர் போலீஸார் லுப்னா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த 6 மாதமாக இருதரப்பினரும் ஒருவரை மாறி ஒருவர் குற்றஞ்சாட்டி காவல்நிலையம் மற்றும் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்து வரும் நிலையில், சென்னை மாநகர் காவல்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் லுப்னா அண்மையில் புதிதாக புகார் அளித்துள்ளார். அதில், மசியுல்லா மீது தான் அளித்துள்ள புகாரை வாபஸ் பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தனது மனைவியுடன் சேர்ந்து மசியுல்லா மிரட்டல் விடுத்து வருவதாக தெரிவித்துள்ள லுப்னா, பெரவள்ளூர், வேலூர் மற்றும் வாணியம்பாடி காவல் நிலையங்களில் தன் மீது வெவ்வேறு புகார்களை அளித்து மசியுல்லா தொந்தரவு செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மனைவியுடனான கருத்து வேறுபாட்டால் 2020 ஆம் ஆண்டே அவரை விட்டு பிரிந்து விட்டதால், திருமணத்திற்கு வரன் தேடி வந்ததாக தெரிவித்துள்ளார் மசியுல்லா. திருமண செயலி மூலமாக அறிமுகமான லுப்னா, தன்னிடமிருந்து அதிகளவு பணம் வாங்கியிருப்பதாக கூறும் மசியுல்லா, இந்தியாவில் தடை செய்யப்பட்ட செயலியில் ஆபாச வீடியோ பதிவிட்டு லுப்னா பணம் சம்பாதித்து வருவதால் அவருடன் பழகுவதையே நிறுத்தி விட்டதாக மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வைத்து லுப்னா தான் தன்னை மிரட்டி வருவதாகவும் கூறினார் மசியுல்லா.

இருவரும் கூறி வரும் புகார்களில் எது உண்மை, எது பொய் என்பதை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.