காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு காவிரி நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி ஒரு லட்சத்து 75 ஆயிரம் கனஅடி வீதம் நீர் வந்து கொண்டிருந்தது..
இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடித்து வருவதால், அணைக்கு வரும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கனஅடி நீரும் முற்றிலுமாக வெளியேற்றப்படுகிறது.
இதன் காரணமாக சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு 2-ஆவது முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரி கரையையொட்டி வசிக்கும் பொதுமக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.