தேச விரோத சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
Published : May 12, 2022 6:38 AM
152 ஆண்டு பழைமை வாய்ந்த காலனிய இந்தியா காலத்து தேச விரோத சட்டப் பிரிவை மறு பரிசீலனை செய்ய உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், அதுவரை, இந்த சட்டத்தின் கீழ், புதிதாக வழக்கு பதிவு செய்வதையும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணையையும் நிறுத்தி வைத்துள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் அறிமுகமான தேச விரோத சட்டப் பிரிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இச்சட்டத்தை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசுத் தரப்பில் அவகாசம் கோரப்பட்டிருந்தது. அதுவரை மாநில அரசுகள் இச்சட்டத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்க உத்தரவிட முடியுமா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. மத்திய அரசுக்கு விதித்த 24 மணி நேர கெடு முடிவடைந்த நிலையில் நேற்று நடைபெற்ற விசாரணையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.