​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
என்னால உனக்கு கஷ்டம்.. வேறு பெண்ண பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ செல்லம்.. குழந்தையுடன் விஷம் அருந்திய மனைவி உருக்கம்..!

Published : May 08, 2022 6:20 AM



என்னால உனக்கு கஷ்டம்.. வேறு பெண்ண பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ செல்லம்.. குழந்தையுடன் விஷம் அருந்திய மனைவி உருக்கம்..!

May 08, 2022 6:20 AM

பரமக்குடி அருகே மன வளர்ச்சி குறைபாட்டின் அறிகுறியுடன், வலிப்பு நோயால் அவதியுற்ற 8 மாத பெண் குழந்தையுடன், தற்கொலை செய்து கொண்ட பெண் ஒருவர் , தனது தாலி கயிற்றை நினைவாக காலம் முழுவதும் இடுப்பில் கட்டிக் கொள்ளும் படியும் , நல்ல பெண்ணை திருமணம் செய்து கொண்டு வேறு ஊரில் சந்தோஷமாக வாழும்படியும், தனது கணவருக்கு எழுதிய உருக்கமான டைரிகுறிப்பு வெளியாகி உள்ளது...

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா நயினார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்லவராயனேந்தல் கிராமத்தில் வசித்து வருபவர் முனீஸ்வரன் இவர் தனது தாய்மாமா மகளான திவ்யாவை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

முனீஸ்வரன் பரமக்குடியில் உள்ள பேக்கரி ஒன்றில் டீ மாஸ்டர் ஆக வேலைபார்த்து வரும் நிலையில் சந்தோஷமாக சென்ற இவர்களது வாழ்க்கையில் கடந்த 8 மாதங்களுக்கு முன் பெண் குழந்தையால் பிரச்சனை உருவானதாக கூறப்படுகின்றது. குழந்தைக்கு தர்ஷினி என பெயர் சூட்டி மகிழ்ச்சியாக வளர்த்து வந்த நிலையில் 3 மாதங்களில் குழந்தையின் நடவடிக்கை வழக்கத்துக்கு மாறாக காணப்பட்டுள்ளது.

மருத்துவர்களிடம் விசாரித்த போது குழந்தைக்கு மனவளர்ச்சி குறைபாட்டிற்கான அறிகுறி தென்படுவதாக தெரிவித்துள்ளனர். மருத்துவர்கள் சுட்டிக்காட்டிய படியே குழந்தை தர்சினிக்கு அடிக்கடி வலிப்பும் ஏற்பட்டுள்ளது . தனது செல்ல மகள் வலிப்பு நோயாலும் அவதிப்படுவதை கண்டு தாய் திவ்யா மிகவும் நொந்து போனதாக கூறப்படுகிறது. கணவனை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியாமலும், குழந்தையின் நிலையை கண்டும் கடுமையான மன உளைச்சளுக்குள்ளாகி இருக்கிறார் திவ்யா.

இந்த வதிலேயே தனது பெண் குழந்தை இவ்வளவு கஷ்டப்படுகிறதே, வளர்ந்த பின்னர் மகளின் நிலை என்னாகும் என்று நினைத்து ஒவ்வொரு நாளும் அக்கம்பக்கத்தினரிடம் மன வேதனையில் அழுது வந்துள்ளார். சம்பவத்தன்று விபரீத முடிவெடுத்த அவர், தனது வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்திற்கு தன் குழந்தையை தூக்கி சென்றுள்ளார். அங்கிருந்த ஒரு கொட்டகையில் வைத்து முதலில் தனது மகளுக்கு பூச்சி மருந்தை கொடுத்து கொலை செய்துவிட்டு, பிறகு தான்அணிந்திருந்த சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.

பரமக்குடியில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய கணவர் முனீஸ்வரன், வீட்டில் மனைவி மற்றும் குழந்தை இல்லை எனத் தெரிந்தவுடன் அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று பார்த்துள்ளார். அங்கு தனது மனைவியும் 8 மாத குழந்தையும் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே நயினார்கோவில் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க அங்கு வந்த காவல்துறையினர் திவ்யா மற்றும் குழந்தை தர்ஷினி உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திவ்யா தனது கணவர் முனீஸ்வரனுக்கு உருக்கமாக எழுதி வைத்திருந்த டைரிக்குறிப்பை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர் . லவ் யூ மை செல்லம் என்று ஆரம்பிக்கும் அந்த கடித்தத்தில் உன்னுடைய பொருளை நான் எடுத்துச்செல்கிறேன், என்னுடைய தாலி கயிற்றை ஞாபகமாக எப்போதும் உனது இடுப்பில் அணிந்திரு, காலம் முழுவதும் உன்னுடன் கயிறாக இருப்பேன், என்று கூறி உள்ள திவ்யா, நானும் குழந்தையும் யாருக்கும் கஷ்டத்தை கொடுக்க நினைக்கவில்லை என்றும் என்னை மன்னித்துக்கொள் , என்னை நீ சந்தோசமாக பார்த்துகிட்ட, தர்ஷினிக்கு காக்க வலிப்பும் வந்துருச்சி, குழந்தை இப்படி பிறந்துட்டே என்று நாளுக்கு நாள் கவலை அதிகமாயிருச்சி அதனால தான் இந்த முடிவை எடுத்து கிட்டேன்..! என்று குறிப்பிட்டுள்ளார்

என் முனீஸுக்கு கஷ்டத்தை கொடுக்க வேணாம் என்றும் இந்த முடிவை தானே தேடிக் கொண்டதாக குறிப்பிட்டுள்ள திவ்யா, என்னால உன் வாழ்க்கையே போச்சே என்று கவலைப்பட வேண்டாம் , நீ வேற நல்ல பெண்ண திருமணம் செய்து கொள் சத்தியமா நல்லா இருப்ப... என்று கடிதத்தில் 3 இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.

திருமணமாகி 2 வருடங்களே ஆவதால் இந்த கொலை மற்றும் தற்கொலை வழக்கு வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. குழந்தையின் உயிரையும், தன்னுடைய உயிரையும் மாய்த்துக் கொண்ட தாயின் விபரீத முடிவால் அவரது உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.