கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஓடும் வேனின் மேற்கூரையில் வைத்திருந்த 264 சவரன் நகைகள் அடங்கிய பெட்டிகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னையைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் தனது குடும்பத்தினர் 10 பேரோடு, டெம்போ டிராவலர் வேனில் தூத்துக்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அடுத்த பாதூர் அருகே ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு உணவருந்தியுள்ளனர்.
அப்போது வேனின் மேற்பகுதியில் கட்டிவைத்திருந்த துணிகள், உடைமைகள் கலைந்திருப்பதைப் பார்த்துள்ளனர். அவற்றில் 264 சவரன் நகைகள் அடங்கிய 2 சூட்கேஸ்கள் மட்டும் மாயமாகி இருந்ததாகக் கூறப்படுகிறது.
திருநாவலூர் காவல் நிலையத்தில் பெரியசாமி கொடுத்த புகாரின் பேரில் சாலையோர உணவகங்கள், கடைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.