இந்தியா - அமெரிக்கா இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் காணொலி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தியா - அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படுத்த இரு நாட்டு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதற்கு முன்னோட்டமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இடையே காணொலி மூலம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதில், பேசிய பிரதமர் மோடி, உக்ரைனில் கவலைக்குரிய சூழலில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றார். அந்நாட்டின் புச்சா நகரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக கவலை தெரிவித்ததுடன் நியாயமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தைகள் அமைதிக்கு வழிவகுக்கும் என நம்புவதாக தெரிவித்த அவர், பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக அந்நாட்டு தலைவர்களுடன் தொலைபேசியில் பேசியதாக கூறினார்.
அதேபோல், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துமாறு ரஷ்ய அதிபர் புதினிடம் தெரிவித்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு இந்தியா சார்பில் மருந்துகள் மற்றும் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், உக்ரைனின் கோரிக்கையை ஏற்று மேலும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என ஜோ பைடனுடனான ஆலோசனையின்போது பிரதமர் கூறினார்.
இந்நிலையில், உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் இந்தியாவின் நடவடிக்கைகளை வரவேற்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். மேலும், இந்தியா - அமெரிக்கா வேகமாக வளர்ந்து வரும் பாதுகாப்பு உறவுகளை கொண்டுள்ளதாகவும், இரு நாட்டு மக்களுக்கு இடையிலான நல்லுறவுதான் இருநாட்டு உறவின் முக்கிய அம்சம் என்றும் அவர் குறிப்பிட்டார்.