வூகானில் இருந்து 324 பேர் வருகை - சிறப்பு முகாமில் வைத்து தீவிர கண்காணிப்பு

0 1635

சீனாவின் வூகானில் இருந்து சிறப்பு விமானத்தின் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்ட 324 பேரும் மருத்துவ கண்காணிப்புக்காக 2 ராணுவ முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

கொரானா வைரஸின் கோரப் பிடியில் சிக்கியுள்ள சீனாவின் வூகான் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக, ஏர்இந்தியா சிறப்பு விமானம் நேற்று அனுப்பப்பட்டது. அங்கு இருந்து 330 இந்தியர்களை விமானத்தில் ஏற்றிவர திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், அதில் 6 பேருக்கு காய்ச்சல் இருந்தது, வூகான் விமான நிலைய சோதனையில் கண்டறியப்பட்டதை அடுத்து, அவர்களை விமானத்தில் செல்ல சீன அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, 3 சிறார்கள், 211 மாணவ-மாணவிகள் உள்பட, 324 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு ஏர்இந்தியா சிறப்பு விமானம், இன்று காலை 7.30  மணியளவில் டெல்லியில் தரையிறங்கியது. 324 பேரும் விமான நிலையத்தில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் பேருந்துகள் மூலம் டெல்லியில் உள்ள, இந்தோ-திபெத்திய எல்லை காவல்படை முகாமுக்கும், ஹரியானாவில் மனேசரில் உள்ள ராணுவ முகாமுக்கும் கொண்டுசெல்லப்பட்டனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்த இரு முகாம்களிலும் 324 பேரும் 14 நாட்களுக்கு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளனர். கொரானா வைரஸ் தொற்று அறிகுறிகள் ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகே அவர்கள் வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கொரானா வைரசின் மையமாக கருதப்படும் ஊகான் நகரில் எஞ்சியிருக்கும் இந்தியர்களையும் மீட்பதற்காக 2வது ஏர் இந்தியா விமானம் இன்று சீனா புறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் தனஞ்செய் குமார், 2வது விமானம் இன்று நள்ளிரவு 12.50 மணிக்கு புறப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் முதல் விமானத்தில் சென்ற அதே மருத்துவர்கள் குழுவுடன், மீண்டும் கேப்டன் அமிதாப் சிங் தலைமையில் மீட்புக்குழு இந்தப் பணியில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments