கார்த்தி சிதம்பரத்திற்கு கிடுக்கிப்பிடி.. சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிரடி..!

0 1679

ருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி தாக்கல் செய்த மனுக்களைத் தள்ளுபடி செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் முட்டுக்காட்டில் உள்ள தங்களுக்கு சொந்தமான சொத்துகளை கடந்த 2015ஆம் ஆண்டு, அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் என்ற நிறுவனத்துக்கு ஒரு ஏக்கர் 4 கோடியே 25 லட்ச ரூபாய் என்ற வகையில் விற்பனை செய்துள்ளனர். ஆனால், சந்தை மதிப்பின்படி ஒரு ஏக்கர் 3 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டு விற்பனை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தொகைக்கு மட்டும் வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. கார்த்தி சிதம்பரம் ரொக்கமாக பெற்ற 6 கோடியே 38 லட்ச ரூபாயையும், அவரது மனைவி ஸ்ரீநிதி பெற்ற ஒரு கோடியே 35 லட்ச ரூபாயையும், கணக்கில் காட்டவில்லை என, அவர்கள் இருவர் மீதும் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. இந்தச்சூழலில், வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்து இன்று தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன், இருவரது மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், இருவருக்கு எதிராக குற்றச்சாட்டுப் பதிவு செய்ய அனுமதி வழங்கிய நீதிபதி, வழக்கு விசாரணையை, வருகிற 21ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். அன்றைய தினம் கார்த்தி சிதம்பரம் மற்றும் ஸ்ரீநிதி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதி, இருவரும் ஆஜராக தவறினால் அவர்களுக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும் ஆணையிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments