BIG STORIES
வைக்கோல் பூதம் கட்டிப் பிடிக்கும்...! குச்சி தலையில் விழுந்தால் என்னவாகும்..? பறக்க விடப்படும் கொழுக்கட்டை...! நம்ம ஊரு திருவிழா ஜோரு...
Apr 08, 2025 06:16 AM
152
வைக்கோல் பூதம் கட்டிப் பிடிக்கும்...! குச்சி தலையில் விழுந்தால் என்னவாகும்..?
பக்தி மற்றும் விநோத பழக்க வழக்கங்களுடன் கொண்டாடப்படும் வண்ணமயமான கிராமத்து திருவிழாக்கள் எப்போதும் மனம் நிறைந்ததாக இருக்கும். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் கொண்டாடப்பட்ட கிராமத்து திருவிழாக்களின் செய்தி தொகுப்பினை காணலாம்...
காப்புக்கட்டி விரதத்தோடு துவங்கும் கிராமத்து திருவிழாக்கள் என்றாலே பக்தியுடன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என தூள் பறக்கத்தான் செய்யும். அதிலும், சில கிராம திருவிழாக்கள் மற்ற திருவிழாக்களிலிருந்து தனித்து காணப்படும்.
அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே குரும்பலூரில் உள்ள செகுட்டப்பர் சுவாமி கோவில் பங்குனி பொங்கல் விழா மற்றும் எஸ்.புதூர் அம்மன் செட்டிகுறிச்சி முத்தாழம்மன் கோவில் விழா தனி கவனம் பெற்றுள்ளது.
குரும்பலூர் செகுட்டப்பர் சுவாமி கோவில் விழாவில் விரதமிருந்து கடவுள் உள்பட பல்வேறு வேடம் பூண்ட பக்தர்கள் ஆங்காங்கே ஆடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, உடல் முழுவதும் வைக்கோலால் சுற்றிக் கொண்டு கையில் குச்சியோடு சிலர் ஒரு இடத்தில் அருள் வந்து ஆடினர்.
அங்கு வந்து நிற்கும் பெண்ணை உடல் முழுவதும் வைக்கோலால் சுற்றிக் கொண்ட வைக்கோல் பூதம் திடீரென கட்டிப்பிடிக்க உடனிருந்தவர்கள் பூதத்தை விலக்கி விட்டனர்.
வைக்கோல் பூதம் கட்டிப்பிடிப்பதால் குழந்தை வரம் வேண்டி வரும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது திருவிழா கொண்டாடும் மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற புலிகுத்தும் நிகழ்ச்சியில் உடல் முழுவதும் சேறு பூசிக் கொண்ட பக்தர்கள் சிலர் பதுங்கியிருந்து புலியை வேட்டை ஆடுவது போன்று நடித்துக் காண்பித்தனர்.
நோய் நொடியில்லாமல் வாழவும், நல்ல மழை பொழிந்து விவசாயம் செழிக்கவும் இந்த திருவிழாவை தொடர்ந்து சுமார் 145 ஆண்டுகளாக கொண்டாடி வருவதாக பக்தர்கள் தெரிவித்தனர் .
அதேப்போன்று, அம்மன் செட்டிகுறிச்சி முத்தாழம்மன் கோயிலில் சிறிய குச்சிகளைக் கொண்டு கோலாட்டம் போல விளையாடப்படும் வைந்தானை அடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பல்வேறு வேடமிட்ட பக்தர்கள் வைந்தானை அடித்து விட்டு ஒரே நேரத்தில் அந்த குச்சிகளை ஒருசேர வானத்தை நோக்கி எறிவார்கள். அந்த குச்சி யார் மீதும் விழாது என்பதும் அப்படியே விழுந்தால் அவர்களுக்கு அடுத்தாண்டு கஷ்டம் ஏற்படும் என்றும் பக்தர்கள் தெரிவித்தனர்.
விழாவில், நெல், கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்களுடன் வேப்பிலையுடன் சேர்த்து செய்யப்பட்ட கொழுகட்டையை சிலர் சூறையிடுவதும் அதனை சிலர் போட்டிப்போட்டு அள்ளிச் செல்வதும் நடைபெற்றது. இந்த கொழுக்கட்டையை விளைநிலங்களில் போட்டால் விவசாயம் செழிக்கும் என்பதும் மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu