கண்ணே நவமணியே... ஒரு நாயின் பாசப்போராட்டம் வாய் விட்டு அழுத சோகம்..! மனிதர்களை விஞ்சிய தாய் பாசம்..

0 422

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் வாகனம் மோதி உயிரிழந்த தனது குட்டியை காப்பாற்றக்கோரி தாய் நாய் நடத்திய பாசபோராட்டம் காண்போரை கண்கலங்கச்செய்தது

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றித் திரிந்து வரும் நாய் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் சில குட்டிகளை ஈன்ற நிலையில் ஒவ்வொன்றாக மாயமான நிலையில் , வெள்ளை நிற நாய் குட்டி மட்டும் தன் தாயோடு சுற்றி வந்தது. வெள்ளிக்கிழமை எதிர்பாராத விதமாக ஆட்சியர் அலுவலக வாகனத்தில் சிக்கி அந்த நாய் குட்டியும் பரிதாபமாக பலியானது.

இதை அறியாத தாய் நாய் தன் குட்டியை எழுப்ப நீண்ட நேரமாக போராடியது, தன் வாயால் நக்கியும், கத்தி ஓலமிட்டும் குட்டியை காப்பாற்ற முயற்சித்தது.

தாய் நாயின் பாசம்போராட்டம் காண்போரை கலங்க செய்தது. தாய் நாயின் பரிதவிப்பை பார்த்த ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் 2 பெண்கள் , முதலில் தாய் நாய்க்கு பிஸ்கட் கொடுத்து சாந்தப்படுத்தினர்

அந்த இரு பெண்களும், இறந்து கிடந்த குட்டி நாயை தூக்கி ஒரு கவரில் போட்டு எடுத்து சென்று ஆட்சியர் அலுவகத்திற்கு பின்புறம் குழிதோண்டி புதைத்தனர்.

குழிக்குள் வைத்து அந்த நாய் குட்டியை அடக்கம் செய்யும் வரை, தாய் நாயின் பெத்த வயிறு துடித்துக் கொண்டே இருந்தது தான் சோகத்தின் உச்சம்..!

தனது குட்டியை அடக்கம் செய்த பின்னரும் அந்த இடத்தைவிட்டு அகல மனமின்றி , அந்தகுட்டியை தூக்கிச்சென்ற பிளாஸ்டிக் கவரை மோப்பம் பிடித்து விட்டு, தாய் நாய் வேதனையில் அழுது ஓலமிட்டபடியே அங்கேயே சுற்றி வந்தது.

அதே நேரத்தில் மயிலாடுதுறையில் புதிய பேருந்துநிலைய கழிப்பிடத்தில் , தனக்கு பிறந்த பச்சிளம் பெண் குழந்தையை தொப்புள் கொடியோடு அனாதையாக போட்டு விட்டு தப்பி ஓடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட பெண் குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments