சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் இன்று இந்திய விமானப்படையின் விமான சாகச நிகழ்ச்சி

0 147

21 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் இந்திய விமானப்படையின் விமான சாகச நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இந்திய விமானப்படையின் 92ம் ஆண்டு நிறைவையொட்டி நடைபெறும் இந்த நிகழ்ச்சியைக் காண தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்கள் சென்னைக்கு வருகின்றனர்.

மெரினா கடற்கரைக்கு மேலே வான் பரப்பில்,காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும் சாகச நிகழ்ச்சியில், இந்திய விமானப்படையின் திறன், வலிமையை பறைசாற்றும் வகையில் 72 விமானங்கள் ஈடுபட உள்ளன.

பிரான்ஸ் தயாரிப்பான ரபேல், மிராஜ் 2000, ரஷ்யாவின் சுகோய், மிக் 29 பைட்டர்ஸ், ஐரோப்பிய சீப்கேட் ஜாக்குவார், அமெரிக்காவின் குளோப் மாஸ்டர் ஆகியவற்றுடன், நீர்மூழ்கிக் கப்பலை தாக்கும் போர் விமானங்கள் சாகசம் செய்ய உள்ளன.

இந்திய விமானப்படையின் முக்கிய ராட்சத விமானமாகக் கருதப்படும் ரஷ்ய தயாரிப்பான எஸ்.யு.30 பிளாங்கர் விமானமும், அனைத்துக் கருவிகள், ஆயுதங்களை தாங்கிய 39 டன் எடையுடன் கூடிய சுகோய் 30 ரக விமானமும், இந்திய தயாரிப்பான தேஜாஸ் விமானம் மற்றும் பிரசாந்த் ஹெலிகாப்டரும் சாகச விமானங்களில் இடம்பிடித்துள்ளன.

இந்திய விமானப்படையில் எப்போதும் அங்கம் வகிக்கும் சூர்யகிரண், ஹாக் எம்கே ஜெட் விமானம் சாரங் ஹெலிகாப்டர் ஆகியவையும், புயல், சங்கம், பல்லவா, சேரா, சோழா, காஞ்சி, நட்ராஜ், நீலகிரி, மெரினா, பாண்டியன், மகாபலி உள்ளிட்ட பெயர்களில் சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட உள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

சுமார் 15 லட்சம் பார்வையாளர்கள் இடம் பெறும் இந்த கண்காட்சி லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற இந்திய விமானப்படை இலக்கு வைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments