100 வருஷம் வாழ்வதும் ஒரு வகையில் சாபம் தானோ..? மனைவியை கொன்ற பெரியவர்..! இந்த நிலை எதிரிக்கும் வரக்கூடாது

0 4545

கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே ஆசாரிவிளையை சேர்ந்த 90 வயதான பனையேறும் தொழிலாளி ஒருவர், நோய்வாய்பட்டு  படுத்த படுக்கையான தனது மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

">

“காலமெல்லாம் உடனிருப்பேன்” என்று அக்னி சாட்சியாய் கரம் பற்றிய மனைவியை தனது 90 வது வயதில் க்ழுத்தை அறுத்து கொன்று விட்டோமே என்று பெரியவர் கண் கலங்கி அமர்ந்திருக்கும் காட்சிகள் தான் இவை..!

கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே ஆசாரிவிளையை சேர்ந்த 90 வயதான பனையேறும் தொழிலாளி சந்திர போஸ்.

தனது 3 மகன்களும் 3 மகள்களும் பேரப்பிள்ளைகளுடன் அவரவர் வீடுகளில் வசித்து வரும் நிலையில் , மனைவி லட்சுமியுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்த வயது முதிர்ந்த தம்பதியை உடனிருந்து கவனிக்காவிட்டாலும், மாதத்திற்கு ஒருவர் என தினமும் 3 வேளையும் ஷிப்ட் முறையில் மகன்கள் உணவு வழங்கி வந்ததாக கூறப்படுகின்றது.

பல ஆண்டுகளுக்கு முன்பே வயது முதிர்வால் மனைவி படுத்த படுக்கையானாலும் 3 வருடங்களுக்கு முன்பு வரை தானே உழைத்து மனைவியை பராமரித்து வந்துள்ளார் போஸ்.

கண்பார்வை தெரியாமல் போனதாலும், வயது முதிர்வாலும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் நிலை போஸுக்கு ஏற்பட்டதால் மனைவியை பராமரிக்க இயலவில்லை என்று கூறப்படுகின்றது

எப்போதும் படுத்தே கிடந்ததால் அவரது மனைவிக்கு உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டு வலி தாங்காமல் இரவெல்லாம் கதறித்துடித்ததாக கூரப்படுகின்றது.

இதனை கண்டு மனம் கலங்கிபோன பெரியவர் போஸ், மனைவியை கருணை கொலை செய்ய முடிவெடுத்து திங்கட்கிழமை காலை கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து போட்டு விட்டு, வாசலில் அழுதபடியே அமர்ந்திருந்ததாக கூறப்படுகின்றது

மதிய உணவு கொடுக்க வந்த இளைய மகன் சாந்த்குமார், அழுதபடி இருந்த தனது தந்தையை கடந்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது தாய் லட்சுமி சடலமாக கிடப்பதை கண்டார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மூதாட்டி லட்சுமியின் சடலத்தை மீட்டு பிணகூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பார்வைக்குறைபாடால் அவதிப்பட்ட பெரியவர் சந்திர போஸ் மீது கொலை வழக்கு பதிந்து கைது செய்த போலீசார் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பார்த்து பார்த்து வளர்த்த பிள்ளைகள் உடன் இருந்து பராமரிக்க தவறியதால் , பெரியவர் தனது மனைவியை கருணை கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments