கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

0 310

காரைக்காலில் காதலியுடன் கடற்கரைக்கு சென்ற மாணவரை மிரட்டி காவலர் ஒருவர் பணம் பறித்த நிலையில், தகவல் அறிந்து புறக்காவல் நிலையத்துக்கு வந்த பெற்றோர் , அந்த காவலரை வார்த்தைகளால் வறுத்தெடுத்தனர்.

கடற்கரைக்கு வரும் காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறித்த புகாருக்குள்ளான காவலரை, காதல் ஜோடியின் பெற்றோர் வறுத்தெடுத்த காட்சிகள் தான் இவை..!

காரைக்கால் கடற்கரையில் பகல் நேரத்தில் பொதுமக்கள் கூட்டம் இல்லாததால் தனிமையில் இனிமை காண வரும் காதல் ஜோடிகள் அங்கு செல்வதுண்டு. அவர்களை குறிவைத்து காரைக்கால் கடலோர காவல் நிலையத்தில் பணிபுரியும் ராஜ்குமார் என்ற காவலர் பணம் பறிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் சனிக்கிழமை காதலியுடன் சென்ற கல்லூரி மாணவரை கடற்கரையில் உள்ள புறக்காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்ற ராஜ்குமார் , அங்கு வைத்து அவர்களை மிரட்டி 3000 ரூபாய் பறித்துக் கொண்டு மிரட்டி அனுப்பியதாக கூறப்படுகின்றது.

வீட்டுக்கு வந்த மாணவர், தன்னிடம் பணம் பறித்த காவலர், தனது காதலியின் கழுத்தில் கை வைத்து தாலி இருக்குதா பார்ப்போம் என்று எல்லை மீறி பேசியதாக அழுதபடியே பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் தெரிவித்தார்.

இதையடுத்து ஆவேசமான அவர்கள் காவலர் ராஜ்குமாரை தேடி சென்றனர். அப்போது புறக்காவல் நிலையத்துக்குள் இருந்து வேறொரு காதல் ஜோடி பதற்றத்துடன் வெளியே வந்தனர். அவர்களை மறித்து விசாரித்த போது காவலர் ராஜ்குமார் , தங்களிடமும் 2500 ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக தெரிவித்தனர்

இதை கேட்ட மாணவரின் நண்பர்கள் , காவலரிடம் நியாயம் கேட்க, அந்த காதல் ஜோடியை காவலர் ராஜ்குமார் அங்கிருந்து போகும்படி விரட்டினார்

இதற்க்கிடையே  மாணவரின் தாயும் தந்தையும்,  ஆவேசமாக புறக்காவல் நிலையத்துக்குள் நுழைந்து  "எம் புள்ள, அந்த பெண்ணத்தான் திருமணம் செஞ்சிக்க போறான்.. எப்படி சார், பணம் பறிப்பீங்க?" என்று கேட்டு காவலர் ராஜ்குமாரை அடுக்கடுக்கான கேள்விகளால் வறுத்தெடுத்தனர்

மாணவரின் பெற்றோரின் ஆவேசத்தால், என்ன செய்வதென்று தெரியாமல் பொறியில் சிக்கிய எலியாக விழித்தபடியே அமர்ந்திருந்தார் காவலர் ராஜ்குமார்

இது குறித்து எஸ்.பியிடம் புகார் அளிப்பதாக கூறிச்சென்ற அவர்கள், வீடியோ ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவலர் ராஜ்குமார் மீது ஏற்கனவே செயின் பறிப்பு வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments