ஆடிட்டரிடம் 1 கிலோ தங்கத்தை ஏமாற்றிய 4 பேர்.. கறுப்பு பணம் வெள்ளையாகுமாம்..!

0 819

ஆடிட்டரை ஏமாற்றி ஒரு கிலோ தங்கத்தை கடத்திச் சென்று கைதாகி சிறைக்கு அனுப்பப்பட்ட 3 பேர் இவர்கள் தான்.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஆடிட்டரான ஹரிசங்கர், தஞ்சை மற்றும் பட்டுக்கோட்டையில் சொந்தமாக ஜூவல்லரி நடத்தி வருகிறார். ஹரிசங்கருக்கு ஈரோடு மாவட்டம் செல்லம்பாளையத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சந்திரசேகர் என்ற பாபுவை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார் அவரது நண்பரான கல்யாணராமன்.

ஹரிசங்கரிடம் பணம் அதிகளவில் இருப்பதை தெரிந்துக் கொண்ட பாபு அதனை குறுக்கு வழியில் பறிக்க திட்டமிட்டுள்ளார். தன்னிடம் கருப்பு பணம் ஏராளமாக இருப்பதாகவும் அதனை கணக்கில் கொண்டு வர தங்கம் வாங்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார் பாபு. இந்த டீல் முடிந்தால் தனக்கு நல்ல லாபம் கிடைக்கும் என நினைத்த ஹரிசங்கர், தானே தங்கத்தை தருவதாக பாபுவிடம் கூறியுள்ளார்.

தானாக வந்து ஹரிசங்கர் வலையில் சிக்கிவிட்டதை அறிந்த பாபு, முதல் தவணையாக ஒரு கிலோ தங்கத்தை எடுத்துக் கொண்டு கோவைக்கு வருமாறு கூறியுள்ளார். பட்டுக்கோட்டையில் இருந்து தனது காரில் ஒரு கிலோ தங்கத்துடன் புறப்பட்டார் ஹரிசங்கர்.

ஹரிசங்கரை பாப்பம்பட்டி பிரிவிற்கு வரவைத்த பாபு, தனக்கு உடல்நிலை சரியில்லாததால் தமது நிறுவன மேலாளர் ராஜ்குமார் தங்களிடம் பணத்தை கொடுத்து தங்கக் கட்டிகளை பெற்றுக் கொள்வார் என தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் அங்குச் சென்ற ராஜ்குமார், தனது பென்ஸ் கார் பழுதாகி விட்டதால் உடனடியாக வரவேண்டி கால்டாக்ஸியில் வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஹரிசங்கரை கால் டாக்ஸியில் ஏற்றிய ராஜ்குமார், நைசாக பேசி தங்கக் கட்டிகள் வைத்திருந்த பையை வாங்கிக் வைத்துக்கொண்டு கார் கிளம்பும்போது நீங்கள் முன்னே செல்லுங்கள் கால் டாக்ஸி ஓட்டுனருக்கு அலுவலகத்தின் முகவரி தெரியும் அவர் உங்களை அங்கு அழைத்துச் செல்வார் நான் பழுதாகி நின்ற காரை எடுத்து வருகிறேன் எனக் கூறி அவர்களை அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால் வழியிலே கால்டாக்ஸி ஓட்டுநர் இறக்கி விடவே, அங்கிருந்தவாறு பாபுவை செல்ஃபோனில் அழைத்துள்ளார் ஹரிசங்கர். கால் டாக்ஸிக்கு பணத்தை கொடுத்து செட்டில் செய்து அனுப்பி விடுமாறும் பின்னால் வரும் ராஜ்குமார் உங்களை அழைத்து வந்து விடுவார் என பாபு கூறியுள்ளார்.

ஆனால், கூறிய படி ராஜ்குமார் வராததோடு 2 பேரின் செல்ஃபோனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சூலூர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார் ஹரிசங்கர். 3 தனிப் படைகள் அமைத்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது கால்டாக்ஸியை பின் தொடர்ந்தே ஒரு கார் வந்ததை கண்டுபிடித்தனர் போலீஸார். அந்தக் காரின் பதிவு எண்ணை வைத்து பார்த்தபோது அது பாபுவுக்கு சொந்தமானது என்பது தெரியவரவே, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு பாபு, நல்லூரைச் சேர்ந்தவர்களான ராஜ்குமார், நவீன்குமார் ஆகியோரையும், 16 வயது சிறுவனையும் கைது செய்தனர். காரை பறிமுதல் செய்த போலீஸார் அவர்களிடமிருந்து தங்கக் கட்டிகளையும் மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments