இனிப்புக்கு 5%, காரத்திற்கு 12% ஜி.எஸ்.டி - கம்ப்யூட்டரே கன்ஃபியூஸ் ஆகுது நிஜத்தில் காரமான விவகாரம்.... மன்னிப்பு வீடியோ வெளியானதால் சர்ச்சை... வெளிநாட்டில் இருந்தபடி 'சாரி' கேட்ட அண்ணாமலை..

0 1318

ஜி.எஸ்.டி குறித்து கேள்வி எழுப்பிய கோவை அன்னபூர்ணா உணவக உரிமையாளர் தாமாக முன்வந்து நிதியமைச்சரிடம் மன்னிப்புக்கேட்ட வீடியோ வெளியானதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்புக்கோரியுள்ளார்.

பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன், மத்திய நிதியமைச்சர் கலந்துரையாடிய நிகழ்ச்சி கோவை கொடிசியா வளாகத்தில் கடந்த 11ஆம் தேதி நடைபெற்றது.

அதில், பார்வையாளராக கலந்துகொண்ட அன்னப்பூர்ணா உணவக உரிமையாளர் ஸ்ரீனிவாசன் ஜி.எஸ்.டி வரி விதிப்பை எளிமையாக்க வேண்டும் என்று நிதியமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார்.

அன்னபூர்ணா ஸ்ரீனிவாசன் பேசிய வீடியோ பரவிய நிலையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று மாலை தனிப்பட்ட முறையில் சந்தித்து அவர் மன்னிப்புக் கோரியதாக கூறப்பட்ட வீடியோவும் வெளியானது.

அவரது மன்னிப்புக்கோரல் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஸ்ரீனிவாசன் தாமாக முன்வந்து மன்னிப்புக் கேட்டதாகவும், அவரை யாரும் மிரட்டவும் இல்லை, கட்டாயப்படுத்தவில்லை என்றும் வானதி சீனிவாசன் விளக்கம் அளித்தார்.

தனது தனிப்பட்ட உணவு முறை பழக்கம் குறித்து பொதுவெளியில் பேசியதற்கும் தன்னிடம் ஸ்ரீனிவாசன் மன்னிப்புக்கேட்டதாகவும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

இதையடுத்து அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் எப்படி வெளியானது அதற்கு பதில் கூறுங்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது ஆவேசமாக பதில் அளித்த அவர், அந்த இடத்தில் பா.ஜ.க தவிர பல கட்சியை சேர்ந்தவர்கள் இருந்தார்கள் யார் வேண்டுமானாலும் வெளியிட்டு இருக்கலாம் என தெரிவித்தார்.

இந்நிலையில், அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியான விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.

தனிப்பட்ட இந்த சந்திப்பு குறித்த வீடியோவை தங்களது நிர்வாகிகள் வெளியிட்டதற்கு அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments