இன்னுமா திருந்தாம இருக்கீங்க..? பெண்ணாய் பிறந்ததை தவிர அந்த பிஞ்சு செய்த பாவமென்ன ? பச்சிளம் பெண் குழந்தை கொலை பின்னணி

0 882

வேலூரில் தனது மனைவிக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என கோவிலுக்கு வேண்டி இருந்த நிலையில் பெண் குழந்தை பிறந்ததால் குழந்தையை கொன்று புதைத்ததாக வாக்குமூலம் அளித்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர் 

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பொம்மன்குட்டை கிராமத்தை சேர்ந்த ஜீவா - டயானா தம்பதியருக்கு பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில் கடந்த 9 நாட்களுக்கு முன்பு 2 வதாக பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை மர்மமாக உயிரிழந்த விவகாரம் தொடர்பாக டயானாவின் தந்தை சரவணன் அளித்த புகாரின் பேரில் விசாரணையை முடுக்கிவிட்ட போலீசார் குழந்தையின் தாய் தந்தையிடம் விசாரித்தனர்.

இடையில் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தலைமறைவான குழந்தையின் ஜீவா மற்றும் டயானா ஊராட்சி செயலாளர் உமாபதி என்பவரது வீட்டில் பதுங்கி இருந்தனர். அங்கிருந்து இருவரையும் பிடித்து வந்து விசாரித்த போது பச்சிளம் பெண் குழந்தை மரணத்துக்கான மர்மம் வெளிச்சத்துக்கு வந்தது.

தனது மனைவிக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என கோவிலுக்கு வேண்டிக் கொண்டு ஆடு கோழிகளை பலி கொடுக்க காத்துக் கொண்டிருந்த ஜீவா, அவற்றை விலைக்கு வாங்கி நேர்த்திக்கடன் செலுத்த தயாராக இருந்ததாக கூறப்படுகின்றது. 2 வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் அதிர்ச்சி அடைந்து ஆதங்க மடைத அவர் எட்டு நாட்களாக என்ன செய்வது என தெரியமல் தவித்து வந்ததாகவும், தாய் வீட்டில் இருந்த மனைவியை சமைத்துக் கொடுக்க ஆளில்லை என சூசகமாக பேசி தன் வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.

பெண் குழந்தையை பார்த்ததும் ஆத்திரத்தில் இருந்த அவர், மனைவி டயானாவும், முதல் குழந்தையும் உறங்கச் சென்றதை உறுதி செய்த ஜீவா பச்சிளம் பெண் குழந்தை வெளியே தூக்கிச்சென்று வாசலில் இருந்து எருக்கன் செடியை ஒடித்து வந்து அதில்வடியும் பாலை பச்சிளம் குழந்தைக்கு வாயில் ஊற்றி உள்ளார். அப்போது குழந்தை அழுது காட்டிக்கொடுத்துவிடக்கூடாது என்று வாயையும் இருக்கமாக மூடிகொடூரமாக கொலை செய்ததாக ஜீவா ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

குழந்தை இறந்தது உறுதியானதும், டயானாவின் அருகில் குழந்தையை கொண்டு வைத்து கம்பலி போட்டு மூடிவிட்டு வெளியே சென்ற ஜீவா, சற்று நேரம் கழித்து திரும்பி வந்து, ஒன்றும் தெரியாதது போல் மனைவியை எழுப்பி குழந்தை ஏன் அழாமல் இருக்கிறது என கேட்டு நாடகமாடி மாமனார் மற்றும் மாமியாரை வரவழைத்துள்ளார்

அவர்கள் குழந்தையை தூக்கிப் பார்த்தபோது வாயில் ரத்தம் வழிந்ததாலும், வீட்டுக்குள் எருக்கஞ்செடி முறிந்து கிடந்ததாலும் எழுந்த சந்தேகத்தின் பேரில் மாமனார் சரவணன் போலீசில் அளித்ததால் பச்சிளம் பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது அம்பலமானதாக போலீசார் தெரிவித்தனர். தங்கள் மாவட்டத்திற்கே இந்த சம்பவம் தலைகுனிவு என்று வேதனை தெரிவித்த வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர், இது போன்ரு வேறு சம்பவங்கள் நடந்துள்ளனவா என்று விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments