பூனைக்கே பிடிக்கலப்பா முகர்ந்து பார்த்து ஓடிய பூனை குளிரூட்டியா.. சவப்பெட்டியா...! - ஓட்டல் மட்டன் பரிதாபங்கள்..!

0 731

ஆட்டுக்கால் பாயா, சூப் என ஓட்டல்களில் தேடிச்சென்று சாப்பிடும் ஆட்டுக்கால் சூப் பிரியர்களின் ஆசையில் அமிலத்தை வீசியது போல் அதிர்ச்சி சம்பவம் சென்னை சைதாப்பேட்டையில் கண்டறியப்பட்டுள்ளது. ஓட்டல்களுக்கு சப்ளை செய்ய வைத்திருந்த  கெட்டுப்போன ஆட்டுக்கால் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

பூனையே முகம் சுழிக்கும் அளவுக்கு மட்டன் கால்கள் வைக்கப்பட்டிருந்த சைதாப்பேட்டை ரஹ்மத் மட்டன் சிக்கன் ஸ்டால் இது தான்..!

கடந்த வாரம் ஜோத்பூரில் இருந்து ரயிலில் சென்னை எழும்பூர் கொண்டு வரபட்ட கெட்டுப்போன 1,600 கிலோ ஆட்டிறைச்சி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யபட்டது. கெட்டுபோன ஆட்டிறைச்சியை கைப்பற்றி ஆய்வுக்கும் அனுப்பி வைத்தனர். அதன் முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

விசாரணையின் தொடர்ச்சியாக சென்னை சைதாப்பேட்டை ரஹ்மத் ஆட்டுக்கால் மொத்த விற்பனையகத்தில் புதன்கிழமை சோதனை நடத்தப்பட்டது. அதன் மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. முடிவில் அங்கு வைக்கப்பட்டிருந்த ஆட்டுக்கால்கள் தரமற்றவை என்பது தெரிய வந்தது.

இதையடுத்து திங்கட்கிழமை அங்கு ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் குளிரே ஆகாத பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 600 கிலோ பூஞ்சை படிந்த ஆட்டுக்கால், மற்றும் அழுகிய ஆட்டுக்குடல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

சென்னையில் பல்வேறு ஓட்டல்களுக்கும் , சூப் கடைகளுக்கும் கிலோ 360 ரூபாய் என்ற விலையில் இந்த ஆட்டுக்கால்கள் சப்ளை செய்யப்பட்டது விலை பட்டியல் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆட்டுக்கால்களை விற்பனை செய்து வந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. பூஞ்சை படிந்த இந்த ஆட்டுக்கால்களை மக்கள் சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தாகும் என்று தெரிவித்த சென்னை மண்டல உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் , அந்த தரமற்ற ஆட்டுக்கால்கள் பொதுமக்களின் கைகளுக்கு கிடைக்காமல் தடுத்துள்ளதாக தெரிவித்தார்

டெல்லி, திருச்சி, மதுரை விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாநில மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு, சென்னையில் உள்ள பல்வேறு ஓட்டல்களுக்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments