இப்படி ஒரு கிரிமினல் மூளையா ? முதலில் பெண் கல்வி அதிகாரி இப்ப ஆம்ஸ்ட்ராங் மனைவி..! சாட்சி சொன்னவருக்கு ஸ்கெட்ச்

0 940

ஆம்ஸ்ட்ராங் மனைவி மகளை கடத்தி குண்டு வீசி கொலை செய்வதாக மிரட்டல் கடிதம் அனுப்பிய விவகாரத்தில் பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்ட நிலையில், தனக்கு எதிராக சாட்சி சொன்ன இளைஞரை பழிவாங்க அவர் போட்ட திட்டம் அம்பலமாகி உள்ளது...

ஆம்ஸ்ட்ராங் மனைவி மற்றும் மகளை கடத்தி குடும்பத்துடன் புகை குண்டு வீசி கொலை செய்து விடுவதாக, சதீஷ்குமார் என்ற இளைஞரின் பெயரில் , தபால் அனுப்பி ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு மிரட்டல் விடுத்ததாக தனியார் தொடக்க பள்ளியின் தாளாளர் அருண் ராஜ் கைது செய்யப்பட்டார்.

இந்த கொலை மிரட்டல் கடிதத்தை அனுப்பிய அருண்ராஜ் ஒரு வில்லங்கம் பிடித்த கிரிமினல் என்கின்றனர் போலீசார். சிதம்பரத்தை சேர்ந்த அருண்ராஜ், சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தொடக்க பள்ளியின் அனுமதிக்காக, கடலூர் மாவட்ட கல்வி அதிகாரியாக இருந்த ரோஸ் நிர்மலா என்பவரை அணுகியுள்ளார்.

அனுமதி அளிக்க ரோஸ் நிர்மலா மறுத்த நிலையில் அவர் லஞ்சம் கேட்டதாக புகார் அளித்த அருண்ராஜ், மாவட்ட கல்வி அதிகாரியான ரோஸ் நிர்மலாவை பழி வாங்க விபரீத செயல் ஒன்றிலும் ஈடுபட்டதாக போலீசார் சுட்டிக்காட்டுகின்றனர். ரோஸ் நிர்மலாவின் புகை படத்தை ஆபாசமாக சித்தரித்து, கேளம்பாக்கத்தில் உள்ள ரோஸ் நிர்மலாவின் மகள் நடத்தி வந்த கடையில் ஒட்டியதாக கூறப்படுகின்றது.

இது குறித்து விசாரித்த கேளம்பாக்கம் போலீசாரிடம், அருண்ராஜ் என்பவர் கடையில் ஆபாச போஸ்டரை ஒட்டியதை பார்த்ததாக சதீஷ்குமார் சாட்சியம் அளித்துள்ளார். அதன் பேரில் அருண்ராஜை போலீசார் அப்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதன் பின்னர் ஜெயிலில் இருந்து வந்த அருண்ராஜ் கண்ணால் பார்த்ததாக சாட்சி அளித்தது தன்னை போலீசாரிடம் சிக்கவைத்த சதீஷ்குமாரை பழி வாங்கும் திட்டத்துடன் காத்திருந்துள்ளார்

அதன்படி தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்படும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இப்படி ஒரு கடிதத்தை அனுப்பினால், எவ்வித விசாரணையும் இல்லாமல் போலீசார் சதீஷ்குமாரை கைது செய்து விடுவார்கள் என நினைத்து, படூர் சதீஷ்குமார் பெயரில், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தை புகை குண்டு வீசி கொலை செய்து விடுவதாக கடிதம் அனுப்பியதாக அருண்ராஜ் செம்பியம் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்

தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன் படுத்துதல் என்ற சட்டப்பிரிவின் கீழ் கைது செயப்பட்ட அருண்ராஜை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, 23 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.

எதற்கு எடுத்தாலும் அடுத்தவர்களை பழிவாங்கும் விபரீத குணம் கொண்டிருந்தால், இறுதியில் அருண்ராஜ் போல சிறை பறவையாகி கம்பி எண்ண வேண்டியது தான் என்கின்றனர் போலீசார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments