குளிருக்கு இதமாக “பார்பிகியூ சிக்கன்” இதை மட்டும் ரூமுக்குள் செய்யாதீங்க.. கொடைக்கானல் போலீஸ் எச்சரிக்கை.. தூக்கத்தில் இரு உயிர்கள் பறி போனது ஏன்?...

0 716

கொடைக்கானலில் குளிருக்கு இதமாக மதுவுடன் பார்பிகியூ சிக்கன் சமைத்து சாப்பிட்டு விட்டு படுத்து உறங்கிய திருச்சியை சேர்ந்த இளைஞர்கள் இருவர் , தூக்கத்திலேயே பலியான சம்பவம...

எழில் கொஞ்சும் அழகுடன், குளிர்ச்சியான சூழ்நிலை நிலவும், கொடைக்கானலுக்கு திருச்சியில் இருந்து ஜெயகண்ணன்,சிவசங்கர்,சிவராஜ்,சென்னையை சேர்ந்த ஆனந்த பாபு ஆகிய 4 நண்பர்கள் கூட்டாக சுற்றுலா சென்றிருந்தனர்.

கொடைக்கானல் அடுத்த வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னப்பள்ளம் செல்லும் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்த இவர்கள் வெள்ளிக்கிழமை இரவு தாங்கள் ஊரில் இருந்து எடுத்து வந்திருந்த பார்பிக்கியூசிக்கன் சமைக்கும் கரி அடுப்பில், தங்கள் ஊர் சிக்கனை பக்குவமாக தயார் செய்து சமைத்து சாப்பிட்டனர். 4 பேரும் இரு தனி தனி அறைகளில் தூங்கச்சென்ற நிலையில், காலையில் ஜெயக்கண்ண, ஆனந்தபாபு ஆகிய இருவரும் தங்கி இருந்த அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தனர்.

சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அறையில் அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்தனர். அவர்கள் படுத்திருந்த அறைக்குள் இருந்த கரி அடுப்பு புகைந்து கொண்டிருந்தது. சாப்பிட்ட தட்டுக்கள் , மசாலா பாக்கெட்டுக்கள், மதுப்பாட்டில்கள் அப்படி அப்படியே கிடந்தது.

இரு சடலங்களையும் கைப்பற்றி பிணகூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தங்களுடன் வந்த இருவர் உயிரிழந்த சம்பவத்தால் உடன் வந்த நண்பர்கள் ஏன்ன நடந்தது ? என்பதே தெரியவில்லை என்று மிரண்டு போய் தெரிவித்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஜெயக்கண்ணன், ஆனந்தபாபு இருவரும் இரவு பார்ப்பிகியூ சிக்கன் சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது மழை தூறியதால் கரி அடுப்பை தங்கள் அறைக்குள் எடுத்து வந்து வைத்து விட்டு போதை மயக்கத்தில் அப்படியே படுத்து உறங்கியது தெரியவந்தது. அந்த அடுப்பில் இருந்து வெளியான புகை அறை முழுவதும் பரவி அவர்கள் இருவரும் மூச்சுத்திணறி பலியாகி இருப்பதாக போலீசார் சுட்டிக்காட்டினர்.

அதே நேரத்தில் அடுப்புக்கரியில் இருந்து வெளியான கார்பண் மோனாக்ஸைடை சுவாசித்ததால், இருதயமும் மூளையும் செயல் இழந்து இருவரும் உயிரிழந்திருக்க கூடும் என்ற அரசு மருத்துவர் பொன்ரதி, இந்த விஷயத்தில் சுற்றுலா பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments