பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டிக்கொலை..! ஆதரவாளர்கள் கண்ணீர் - மறியல்

0 1179

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் 10 பேர் கொண்ட மர்மக் கும்பலால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். கொலை சம்பவம் தொடர்பாக சரணடைந்த 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். சமத்துவ சகோதரர் என்று ஆதரவாளர்களால் அழைக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கிற்கு சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அவர் சார்ந்த சமூத்தினரிடையே குறிப்பிடதக்க செல்வாக்கு இருந்தது.

ஆம்ஸ்ட்ராங் பெரம்பூர் வேணுகோபால்சாமி தெருவில் உள்ள தனது பழைய வீட்டை இடித்து விட்டு தான் புதிதாக கட்டிவரும் வீட்டின் கட்டுமான பணியை பார்வையிடுவதற்காக, அயனாவரத்தில் தான் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

மாலை 6 மணி அளவில் கட்டுமான பணி நடக்கும் இடத்தில் நின்று பேசிக் கொண்டிருந்த போது 3 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட இளைஞர்கள், ஆதரவாளர்கள் போல அவரை தேடி வந்து “அண்ணே...” என்று பேச்சுக்கொடுத்துள்ளனர். அவர்களிடம் அவர் ஆர்வமாக பேச தொடங்கிய போது உணவு டெலிவரி பாய் போல ஏற்கனவே அங்கு நின்ற சிலர் அவரது பின்பக்கமாக வந்து தாக்கி உள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் சுதாரிப்பதற்குள்ளாக ஆதரவாளர்கள் போல வந்தவர்களும் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் அவரை சராமரியாக வெட்டி உள்ளனர். இதனை தடுக்க வந்த வீரமணி, பாலாஜி ஆகிய இருவரையும் வெட்டி கீழே தள்ளி விட்டு பைக்குகளை எடுத்துக் கொண்டு தப்பிச்சென்றதாக கூறப்படுகின்றது.

உயிருக்கு போராடிய ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடனடியாக அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. அதற்குள்ளாக ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்ததால், அவரது ஆதரவாளர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து ஏராளமான வழக்கறிஞர்கள், இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்ட ஆதரவாளர்கள் அப்பல்லோ மருத்துவமனை முன்பு குவிந்தனர்.

உடனடியாக அவரது உடல் அங்கிருந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. உளவுத்துறையின் கவனக்குறைவே கொலைக்கு காரணம் என்று ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டி பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டங்களை நடத்தினர்.

அண்மையில் மெரீனாவில் கொல்லப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக 10 பேர் கொண்ட கூலிப்படையை ஏவி , ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் 10 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்தக் கொலை தொடர்பாக, கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு உள்பட 8 பேர் அண்ணாநகர் துணை ஆணையர் முன்னிலையில் சரணடைந்தனர்.

ஆரம்ப காலத்தில் ஆம்ஸ்ட்ராங் மீது கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் போலீசாரால் போடப்பட்ட நிலையில் அவற்றை சட்ட ரீதியாக எதிர்கொண்டதால் அனைத்து வழக்குகளில் இருந்தும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏவுமான பூவை மூர்த்தி மூலமாக 1996 ஆம் ஆண்டு அரசியல் களத்திற்கு அழைத்து வரப்பட்ட ஆம்ஸ்ட்ராங். மாற்றுக்கட்சியாக இருந்தாலும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார்.

திருப்பதியில் உள்ள சட்டக்கல்லூரியில் பட்டம் பெற்ற ஆம்ஸ்ட்ராங், 2006 ஆம் ஆண்டு சுயேட்சையாக நின்று சென்னை மாநகராட்சியின் கவுன்சிலராக வெற்றி பெற்றார். அதன் பின்னர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரானார்.

நூற்றுக்கணக்கான ஏழை எளிய மாணவர்களை தனது சொந்த செலவில் சட்டக்கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்ததாகவும், ஏராளமான இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியதாகவும் அவரது சேவையை நினைவு கூர்ந்த ஆதரவாளர்கள் , ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள ரயில்வே நியூ ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்க அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments