பிறந்த நாள் ஸ்வீட்டில் போதை பொருள் கலந்து பள்ளி மாணவி பலாத்காரம்..! போதை பொருள் விற்கும் கேடிகள் கைது

0 1480
பிறந்த நாள் ஸ்வீட்டில் போதை பொருள் கலந்து பள்ளி மாணவி பலாத்காரம்..! போதை பொருள் விற்கும் கேடிகள் கைது

பிறந்த நாள் பார்ட்டி என்று பள்ளி மாணவிக்கு ஸ்வீட்டில் மெத்தபெட்டமைன் போதை பொருளை கலந்து கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக போதை பொருள் விற்பனை கும்பலை சேர்ந்த 3 பேரை சென்னை போலீசார் கைது செய்தனர்

சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல காபி ஷாப்புக்கு நண்பர்களுடன் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்த தனியார் பள்ளி மாணவி ஒருவர், தோழியை நம்பி பிறந்த நாள் பார்ட்டிக்கு சென்ற போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளித்தார். மாணவியுடன் நட்பாக பழகி பிறந்த நாள் பார்ட்டி தருவதாக அழைத்துச்சென்று ஓயோ சில்வர் கீ தங்கும் விடுதியில் வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சினிமா ஆடை வடிவமைப்பாளர் அகிரா, சோமேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

போலீசாரின் விசாரணையில் கைதானாவர்கள் , மாணவிக்கு மது கொடுத்து மயங்க வைத்ததாக கூறிய நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியோ, தான் இனிப்பு சாப்பிட்ட பின் மயக்கம் வந்ததாக தெரிவித்தார். போலீசார் இது தொடர்பாக விசாரணையை முன்னெடுத்தனர். தலைமறைவாக இருந்த கோடம்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் என்கிற வில்லியம்ஸை திண்டிவனத்தில் வைத்து பிடித்தனர், அவர் மெத்த பெட்டமைன் என்ற போதை பொருளை ஸ்வீட்டில் கலந்து மாணவிக்கு கொடுத்தது தெரியவந்தது. மாணவி போதை மயக்கத்தில் இருப்பதை பயன் படுத்தி கூட்டாளி சோமேஸுடன் சேர்ந்து வில்லியம்சும் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிவித்த போலீசார், வில்லியம்ஸ் மன்னடி பகுதியில் இருந்து போதை வஸ்துக்களை வாங்கி வந்து இன்ஸ்டா கிராம் மூலம் பள்ளி கல்லூரி மாணவிகளை தொடர்பு கொண்டு சப்ளை செய்து வந்ததாக தெரிவித்தனர்.

வில்லியம்ஸுடன் தங்கி இருந்த விழுப்புரம் சூர்ய பிரகாஷ், சைதாப்பேட்டை அஜய் ஆகியோரிடம் இருந்து 2 கிராம் எடையுள்ள மெத்த பெட்டமைன் போதை பொருளை கைப்பற்றிய போலீசார் அவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வில்லியம்ஸ் மீது போக்சோ வழக்குடன் போதை பொருள் கடத்தல் வழக்கும் பதியப்பட்டுள்ள்ளது.

தங்கள் மகளுக்கு சுதந்திரம் கொடுத்து வளர்ப்பதாக நினைத்து பெற்றோர் கண்டு கொள்ளாமல் விட்டதால், சம்பந்தப்பட்ட பள்ளி மாணவி காபி ஷாப்பில் கிடைத்த திடீர் நண்பர்களை நம்பிச்சென்று இனிப்பு என்று ஏமாந்து போதை பொருளை பயன் படுத்தியதால் பாதிப்புக்குள்ளானதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments