ஓடும் ரெயிலில் மது அருந்தி சி.ஆர்.பி.எஃப் போலீஸ் தொல்லை.. சங்கிலியை பிடித்து இழுத்த பயணிகள்.. நடுவழியில் இறக்கி விட்ட சம்பவம்

0 901

சென்னையில் இருந்து கோவை சென்ற சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவில்லா பெட்டியில் கும்பலாக ஏறி அமர்ந்து கொண்டு மது அருந்தி பயணிகளுக்கு தொந்தரவு கொடுத்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் நடுவழியில் ரெயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டனர்.

ரெயிலில் வம்பு செய்த குண்டர்களை போலீசார் இறக்கிவிட்ட சம்பவத்தை பார்த்திருக்கிறோம், ஆனால் பயணிகளிடம் வம்பு செய்த புகாரில் மத்திய ரிசர்வ் போலீசாரை ரெயிலில் இருந்து இறக்கிவிட்ட காட்சிகள் தான் இவை..!

சென்னை சென்டரலில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கம் போல் நேற்று இரவு 10 மணியளவில் கோயம்புத்தூர் நோக்கி புறப்பட்டது. அப்போது ரெயில் இன்ஜின் அருகில் உள்ள முன்பதிவில்லாத பொது பெட்டியில் மத்திய ரிசர்வ் போலீசார் 10 க்கும் மேற்பட்டவர்கள் பயணம் மேற்கொண்டனர். சென்னையில் இன்டர்ன்ஷிப் பயிற்சி முடித்துவிட்டு கோயம்புத்தூருக்கு சென்ற அவர்கள் ரெயிலில் மது அருந்தி விட்டு பயணிகளுக்கு கடும் தொல்லை கொடுப்பதாக கூறி ஜோலார்பேட்டையில் சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை மற்ற பயணிகள் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது

போதையில் இருந்த மத்திய ரிசர்வ் போலீசார் கழிவறை அருகே செல்லும் பயணிகளை நீங்கள் இந்த பக்கம் வரக்கூடாது என கூறி தாக்கியதாகவும், இதனை தட்டி கேட்ட பயணியை, தான் வைத்து இருந்த துப்பாக்கியால் சுட்டு விடுவதாக மிரட்டியதாகவும் பயணிகள் குற்றஞ்சாட்டினர்.

ரெயிலில் இருந்து சக பயணிகள் அனைவரும் கிழே இறங்கி மது போதையில் ரகளையில் ஈடுபட்ட மத்திய ரிசர்வ் போலீசாரை கீழே இறக்க வேண்டும் அவர்கள் பயணம் செய்யும் ரெயிலில் நாங்கள் பயணம் செய்யமாட்டோம் என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மத்திய ரிசர்வ் போலீசாரிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்கள் அனைவரையும் கிழே இறங்கினார்.

இதனால் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் அரை மணி நேரம் தாமதமாக கோயம்புத்தூர் நோக்கி புறப்பட்டு சென்றது.
ஹைதராபாத் ரெயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மத்திய ரிசர்வ் போலீசாரை ஏற்றி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர் . இதனால் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments