கோயில் மணி ஓசையில் மயங்கி மலர்ந்த காதலால் போலீசிடம் சிக்கிய அர்ச்சகர்..! டி.வி. வர்ணனையாளர் கண்ணீர்

0 646

சென்னையில், கோயில் தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததோடு ரகசிய திருமணமும் செய்துக் கொண்ட கோயில் அர்ச்சகர் ஒருவர் மீது தனியார் தொலைக்காட்சி பெண் ஊழியர் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

சினிமா கதாநாயகன் போல காட்சியளிக்கும் இவர் தான் பாலியல் புகாருக்கு உள்ளாகியிருக்கும் காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து வரும் 30 வயது பெண் ஒருவர் சென்னை விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு அடிக்கடிச் சென்று வரும்போது அந்த கோயிலில் அர்ச்சகராக இருந்து வரும் கார்த்திக் முனுசாமி என்பவர் தனக்கு அறிமுகமானதாக தெரிவித்துள்ளார் அந்த பெண்.

கோயில் நிகழ்ச்சிகளையும் ஆன்மீக சொற்பொழிவுகளையும் வாட்ஸ் அப் மூலமாக அந்த பெண்ணுக்கு அனுப்பி வந்துள்ளார் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி.

வழக்கம் போல ஒருநாள் கோயிலுக்குச் சென்ற அந்த தொகுப்பாளினியை அவரது வீட்டில் விட்டு விடுவதாக கூறி தனது பென்ஸ் காரில் அழைத்துச் சென்றுள்ளார் அர்ச்சகர். செல்லும் வழியிலேயே தனது வீடு இருப்பதாகவும் அங்கு சென்று விட்டு பிறகு உங்களது வீட்டிற்குச் செல்லலாமே எனக் கூறி தனது வீட்டிற்கு அந்த நிகழ்ச்சி தொகுப்பாளினியை அழைத்துச் சென்றுள்ளார் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி.

வீட்டிற்கு சென்றதும் கோயில் தீர்த்தம் என்று கூறி தனக்கு தந்ததை குடித்த சிறிது நேரத்தில் தான் மயங்கிவிட்டதாகவும், மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்த தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்ததாக புகாரில் தெரிவித்திருந்தார் தொகுப்பாளினி.

இதுகுறித்து அர்ச்சகரிடம் கேட்ட போது, அவர் தனக்கு தாலி கட்டி ரகசிய திருமணம் செய்து கொண்டு தன்னை சமாதானப்படுத்தினார் என தெரிவித்துள்ளார் அந்த தொகுப்பாளினி. தன்னுடன் குடும்பம் நடத்தி வந்த கார்த்திக் முனுசாமி தற்போது பிற நபர்களின் பாலியல் இச்சைக்கு இணங்கும்படி தன்னை மிரட்டி வருவதாகவும், கோயிலுக்கு வரும் பல பெண்களுடன் அர்ச்சகருக்கு தொடர்பு இருப்பதாகவும் புகாரில் குற்றம்சாட்டியிருக்கிறார் தொகுப்பாளினி.

பெண்ணை மானபங்கம் செய்தல் உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் அர்ச்சகர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்த நிலையில், அறநிலையத்துறை அதிகாரிகளும் இந்த புகார் குறித்து அர்ச்சகரிடம் நேரில் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனிடையே, அர்ச்சகரை கோயில் அறங்காவலர் குழு பணியிடை நீக்கம் செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசாரைப் பிடித்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments