தந்தையைக் கொன்ற 21 வயது யங் பிரின்சஸ்.. தப்பை சாடியதால் கொலை..!
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே தந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்றதாக 21 வயது மகள், 40 வயது ஆண் நண்பருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் கடுக்கரை கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து 21 வயதான தனது மூத்த மகள் ஆர்த்தியுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி காலை தனது தந்தை இறந்துவிட்டதாக ஆர்த்தி உறவினர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளார். அதீத மது போதையால் உயிர் போனதாக அவர் தெரிவித்த நிலையில், விவகாரம் காவல்துறை வசம் சென்றது.
உடற்கூராய்வில் சுரேஷ்குமார் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததையடுத்து ஆர்த்தியின் நடவடிக்கைகளை ரகசியமாகக் கண்காணித்து வந்த போலீசார், அவரிடம் கிடுக்கிப் பிடி விசாரணை நடத்தினர். அதில் சுரேஷ் மரணத்தின் மர்மம் விலகியது.
பக்கத்து வீட்டுக்காரரும் 3 குழந்தைகளின் தந்தையுமான 40 வயது சுரேஷ்பாபு என்பவனுடன் 21 வயதான ஆர்த்திக்கு தவறான தொடர்பு இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இதனையறிந்து தந்தை சுரேஷ்குமார் மகள் ஆர்த்தியை கண்டித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து முறைதவறிய காதலுக்கு இடையூறாக உள்ள தந்தையை காதலுடன் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டதாக தெரிவித்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
கடந்த 26ஆம் தேதி இரவு சுரேஷ்குமார் வீட்டுக்கு வந்தபோது ஆர்த்தியும் சுரேஷ்பாபுவும் ஒன்றாக இருப்பதைப் பார்த்து சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது. அவரை சமாதானம் செய்து தனியாக அழைத்துச் சென்ற சுரேஷ்பாபு, அளவுக்கு அதிகமாக மதுவை வாங்கிக் கொடுத்து, சுரேஷ்குமார் சுயநினைவை இழந்ததும் வீட்டுக்கு அழைத்துச் சென்று கட்டிலில் கிடத்தி, ஆர்த்தி அவரது கால்களைப் பிடித்துக் கொள்ள, சுரேஷ்பாபு அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Comments