வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் நுழைவு தேர்வில் முறைகேடு உ.பி போலீசில் சிக்கிய பலே டெக்கிகள்..!

0 457

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் சேர்வதற்காக ஆன்லைன் தேர்வில் கணினித் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி முறைகேடு செய்த இருவரை உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். மாணவர்களிடம் லட்சங்களை பெற்ற டெக்கிகள் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு 

இந்தியாவில் உள்ள எந்த பல்கலைக்கழகத்தில் வேண்டுமானாலும் 100 சதவீதம் சீட்டு பெற்றுத்தரப்படும் என்று ராய்ப்பூர் ஐ.டி பார்க் அருகில் செயல்படும் edu choice என்ற கன்சல்டன்சி நிறுவனம் விளம்பரம் ஒன்றை முக நூலில் வெளியிட்டு இருந்தது.

அந்த நிறுவனத்தை சேர்ந்த ஜித்தேஷ்குமார் மற்றும் ராகுல்குமார் ஆகியோரை பிடித்து விசாரித்த போது அவர்களது கணினியில் வேலூர் விஐடி பல்கலைகழகத்தின் ஆன்லைன் நுழைவுதேர்வு வினாத்தாள் இருந்தது.

மாணவர்களிடம் தலா 2 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு வேலூர் விஐடி பல்கலைகழகத்தில் புதிய மாணவர் சேர்க்கைக்காக நடந்த ஆன்லைன் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இருவரையும் கைது செய்து நுழைவு தேர்வில் எப்படி முறைகேடு செய்ய முடிந்தது ? என்று விசாரித்த போது, அரியானாவை சேர்ந்து குல்வீர் சிங் மற்றும் கவுரவ் ஆகியோர் உதவியுடன் கணினி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இந்த தேர்வுத் தாள் திருட்டு மோசடியை அரங்கேற்றியது அம்பலமானது.

வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் சேர்வதற்காக ஆன்லைன் நுழைவு தேர்வு எழுதும் மாணவர்கள் பயன்படுத்தும் கணினியில் இவர்கள் செயலி ஒன்றை பதிவேற்றம் செய்து அனுப்பி உள்ளனர்.

பணம் கொடுத்த மாணவர்களின் கணினிக்கு வினாத்தாள் வந்த அடுத்த நொடி, அந்த செயலி மூலமாக நுழைவுத்தேர்வு வினாத்தாள் உத்தரப்பிரதேசத்தில் உள்ள இந்த கும்பலின் கணினிக்கு வந்துவிடுமாம், உடனடியாக அவர்கள் வினாத்தாளுக்கு உரிய பதிலை பார்த்து தயாரித்து பணம் கொடுத்த மாணவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆன்லைன் மூலம் நுழைவுத்தேர்வு நடத்தும் பல்கலைக்கழகங்களை குறிவைத்து, மாணவர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை வசூல் செய்து இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.

விஐடி பல்கலைக்கழகத்தில் எத்தனை மாணவர்கள் இதுபோன்று மோசடி செய்து தேர்வு எழுதினார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதேபோன்று வேறு எந்தெந்த பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வில் மோசடி நடைபெற்றது என்பது குறித்தும் உத்தரப்பிரதேச தனிப்படை போலீசார் விரிவான விசாரணை நடத்திவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments