SBI லாக்கரில் நகை வைக்க போறீங்களா ? நகையை பறி கொடுத்து திருச்சி வீதியில் தவிக்கும் பெங்களூர் மென் பொறியாளர்..! விழிபிதுங்கிய வங்கி அதிகாரிகள்

0 518

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் இரு வாடிக்கையாளருக்கு ஒரே லாக்கரின் இரண்டு சாவிகளை வழங்கிய சம்பவத்தில் பெண் பொறியாளர் வைத்திருந்த 11 சவரன் களவு போன சம்பவத்தில் வங்கி மேலாளரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்

எஸ்.பி.ஐ லாக்கரில் வைத்த 11 சவரன் நகைகள் களவுபோனதாக புகார் கூறி 10 நாட்களாக வீதியில் தவிக்கும் மென் பொறியாளர் கலைச்செல்வி இவர் தான்..!

திருச்சி எடமலை பட்டி புதூரை சேர்ந்தவர் கலைச்செல்வி, மென்பொறியாளரான இவர் பெங்களூரில் கணவருடன் வசித்து வருகின்றார். கடந்த ஜனவரி 5ந்தேதி பணம் செலுத்தி சொந்த ஊரான எடமலைப்பட்டி புதூரில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி கிளையில் A-7 என்ற லாக்கரை பெற்ற கலைச்செல்வி, 11 சவரன் நகைகளை சுருக்கு பைக்குள் போட்டு தனது ஆதார் நகலுடன் லாக்கருக்குள் வைத்தார் இதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொண்டார்

இந்த நிலையில் கடந்த மார்ச் 13 ந்தேதி கலைசெல்வியை வங்கிக்குவருமாறு அவரசமாக அழைத்த வங்கி அதிகாரிகள் வங்கி லாக்கர் தவறுதலாக மாறி உள்ளது என்று சமாளித்துள்ளனர். இதனால் பதறிபோன கலைசெல்வி தனது லாக்கரை திறந்து காண்பிக்க கூறியுள்ளார். திறந்த போது உள்ளே இருந்த பையை பார்த்து விட்டு அதிர்ச்சி அடைந்தவர், அது தனது நகை பை அல்ல , சாவி தன்னிடம் இருக்கும் போது எப்படி இன்னொருவர் நகைப்பை உள்ளே வந்தது எப்பாடி ? என்றும் எனது நகைகள் எங்கே ? என்றும் கேட்டு வங்கி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார்

கலைசெல்விக்கு வழங்கப்பட்டது A-7 லாக்கரின் ஸ்பேர் கீ என்று கூறிய அதிகாரிகள், அந்த லாக்கரின் ஒரிஜினல் கீ 87 வயது வாடிக்கையாளர் ஒருவரிடம் இருந்ததாகவும், நீண்ட காலம் அவர் பயன்படுத்தாமல் வைத்திருந்த நிலையில் , தவறுதலாக லாக்கரின் ஸ்பேர் கீயை கலை செல்வியிடம் வழங்கி உள்ளனர். கலைசெல்வி நகை வைப்பதற்கு திறந்த அன்று 87 வயது நபருக்கு ‘உங்கள் லாக்கர் திறக்கப்படுகின்றது ’என்று செல்போனில் குறுந்தகவல் சென்றுள்ளது. இதையடுத்து சில தினங்கள் கழித்து வந்து அவர் லாக்கரை திறந்து பார்த்த போது, கலைசெல்வியின் ஆதார் நகல் மட்டும் உள்ளே இருந்ததாக கூறி அதனை தங்களிடம் கொடுத்துவிட்டு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பின்னர் ஒரு நாள் வந்து அந்த நபர் தங்கள் குடும்பத்தினரின் நகைகளை லாக்கரில் வைத்துச்சென்றுள்ளார் என்றும் உங்கள் நகைகள் எப்படி மாயமானது என்று தங்களுக்கு தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.

இதையடுத்து தனது லாக்கரில் வைக்கப்பட்ட 11 சவரன் நகைகள் களவு போனதாக கலைசெல்வி எடைமலைபட்டி புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் காவல் ஆய்வாளர் பேபி உமா வழக்கை முறையாக விசாரிக்காமல் அழைக்கழித்ததாக கூறி கலை செல்வி புகார் தெரிவித்தார்

கடந்த 10 நாட்களாக தான் சொந்த பணியை பார்க்க இயலாமல் கடும் மன உளைச்சலில் திருச்சியில் தவிப்பதாகவும், தனது 11 சவரன் நகை மற்றும் இத்தனை நாள் தன்னை அழைக்கழித்ததற்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கலை செல்வி ஆதங்கம் தெரிவித்தார்

இது குறித்து விளக்கம் அளித்த காவல் ஆய்வாளர் பேபி உமா, வங்கி அதிகாரிகளின் கவனக்குறைவால் இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பதால், அவர்கள் கலைசெல்விக்கு உரிய இழப்பீடு வழங்க தயாராக இருப்பதால் வழக்கு பதிவு செய்யாமல் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments