10 நாட்களுக்கு முன்பே அவருக்கு தெரியுமாம்...! பவதாரிணி உயிரிழந்தார்..! முற்றியதால் காப்பாற்ற இயலவில்லை

0 3188

இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி புற்று நோய் சிகிச்சைக்காக இலங்கைக்கு சென்ற நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

10 நாட்களுக்கு முன்பே மரணம் குறித்து தெரிந்தாலும் மன உறுதியுடன் மேற்கொண்ட சிகிச்சை பலனளிக்காத சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

இசைஞானி இளையராஜாவின் மகள் என்ற அடையாளத்துடன் திரை உலகில் நுழைந்தாலும் தனது மெல்லியகுரல் வளத்தால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் பாடகி பவதாரிணி.

பாரதி படத்தில் அவர் பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலுக்காக தேசிய விருது பெற்றார்

அழகி படத்தில் பவதாரிணி குரலில் ஒலித்த ஒளியிலே தெரிவது தேவதையா பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது

இளையராஜா, தேவா, சிற்பி, ஹாரிஷ் ஜெயராஜ் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் ஏராளமான பாடல்கள் பாடி உள்ளார் பவதாரிணி,

பாடகியாக மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், தெலுங்கு இந்தியில் 10 படங்களுக்கு இசை அமைத்துள்ளார்

2019 ஆம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்திற்கு பின்னர் திரை உலகில் இருந்து ஒதுங்கி இருந்த பவதாரினி சிறுநீரக புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை அவர் உயிரிழந்தார்.

இலங்கையில் தங்கி ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்ததாக தகவல் வெளியானது.

சனிக்கிழமை நடக்க இருந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்க இளையராஜா இலங்கை சென்றிந்த நிலையில் மகளின் மரணச்செய்தி அவரை ஆற்றொணா துயரத்துக்குள்ளாக்கி உள்ளது. பவதாரினியின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட உள்ளது.

முன்னதாக பவதாரினிக்கு புற்று நோய் குறித்த தகவல் தெரியவந்ததும் பல மருத்துவர்களிடம் சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் நோய் முற்றியதால் விரைவில் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் கடந்த ஜூலை மாதம் தனது உறவினர்கள் அனைவரையும் அழைத்து மகிழ்ச்சியாக பிறந்த நாள் கொண்டாடி தனது மன உறுதியை வெளிக்காட்டிய பவதாரணிக்கு, 10 நாட்களுக்கு முன்பே மருத்துவர்கள் மரணமடையும் நாளை அறிவித்து விட்டதாக கூறப்படுகின்றது.

இருந்தாலும் ஆயுர்வேத சிகிச்சையாவது கை கொடுத்து விடாதா ? என்ற நம்பிக்கையில் பவதாரினியை இலங்கைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றுள்ளனர்.

புற்று நோய் முற்றிய நிலையில் ஹீமோ தெரபி உள்ளிட்ட எந்த ஒரு சிகிச்சையும் பலனழிக்காமல் அவரது உயிர் பிரிந்து விட்டதாக கூறப்படுகின்றது.

காற்றில் கலந்த பவதாரிணி என்ற கீதம் என்றென்றும் இசை ரசிகர்களின் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments