ப்ரியான்னா... பிளவர்ன்னு.. நெனச்சியா... ரவுடி பேபிடா.. ரொமான்ஸ் கில்லர் கைது.!

0 1605

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தன்னை சந்திப்பதை தவிர்த்த காதலனை வீடுதேடிச்சென்று சவால் விட்டு, கூலிப்படையை ஏவி தீர்த்துக் கட்டிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் சிவன் கோவில் தெருவை சார்ந்தவர் பிரியா. கணவர் லட்சுமணனுடன் ஏற்பட்ட கருத்து வேறு பாட்டால் பிரியா அவரை பிரிந்து மூன்று பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் பிரியாவுக்கு, பொன்னேரி பாலாஜி நகர் தெருவை சார்ந்த கொரியர் விநியோகிக்கும் பணியாற்றி வந்த கோபாலகிருஷ்ணன் என்பவருடன் காதல் மலர்ந்தது.

தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்த நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு பிரிந்ததாகவும், அதன் பின் கோபாலகிருஷ்ணன், பிரியாவை சந்திப்பதை தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.இதையடுத்து கோபாலகிருஷ்ணனின் வீடு தேடிச்சென்ற பிரியா, அவரது உறவினர்களிடம் கோபாலகிருஷ்ணன் தன்னை பயன்படுத்திவிட்டு ஏமாற்றிவிட்டதாக கூறி கடுமையாக திட்டியதாக தெரிகிறது.

கோபாலகிருஷ்ணன் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்து இன்னும் ஒரு மணி நேரத்தில் என்ன ஆகப்போகிறான் பாருங்க... என சவால் விட்டு மிரட்டி விட்டு பிரியா அங்கிருந்து கிளம்பி சென்றதாக கூறப்படுகிறது. இது பற்றி தெரிந்து கோபாலகிருஷ்ணன் பிரியாவை தேடிச்செல்ல, வழியில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

அப்போது கோபாலகிருஷ்ணனை தரக்குறைவாக திட்டிய பிரியா தன்னுடன் வந்த 4 பேரை ஏவி, அவனை வெட்டுங்கடா எனக் கூறியதாகவும், உடனே அவருடன் இருந்தவர்கள் கோபாலகிருஷ்ணனை ஓட ஓட வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. உயிருக்கு போராடிய கோபாலகிருஷ்ணனை மீட்டு ஆட்டோவில் ஏற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்துப் பார்த்தபோது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து பிரியாவை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 4 பேரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். திருமணம் கடந்த உறவை நாடிய பெண்மணியை தேடிச்சென்ற இளைஞர் பரிதாபமாக உயிர் விட்டிருப்பதாகவும் போலீசார் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments