திருச்சி விஷம் அருந்தி இறந்ததாக கருதப்பட்ட இளைஞர்... அழுகுரல் சத்தத்தை கேட்டு கண் திறந்து பார்த்த இளைஞர்

0 2095

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விஷம் அருந்திய இளைஞர்  இறந்துவிட்டதாக கருதி உறவினர்கள் கதறி அழுத நிலையில் உயிர் பிழைத்ததையடுத்து அவரை போலீசார் ஆம்புலன்ஸ் உதவி மூலம்  மருத்துவமனையில் அனுமதித்தனர். 

பொன்னம்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஆண்டிநாயக்கர் , கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சனை காரணமாக விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்ட நிலையில் அவரை மீட்ட குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு இளைஞருக்கு சிகிச்சையளித்து வந்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர், ஆனால் குடும்பத்தினர்  அவரைஆம்புலன்ஸ் உதவியுடன் வீட்டிற்கு எடுத்துச்சென்றுள்ளனர்.

வீட்டின் அருகே கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்த அவர் அசைவற்ற நிலையில் இருந்ததால் இறந்து விட்டதாக கருதிய நிலையில் அக்கம் பக்கத்தினரும் அங்கு வந்து வாலிபரை பார்த்து கதறி அழுது கொண்டிருந்தனர்.

மேலும் துக்க நிகழ்விற்கான பணிகளையும் துவங்கியதாக கூறப்படுகின்றது. இதற்கிடையில்  அனைவரின் அழுகுரல் கேட்ட அவர் கண்ணை திறந்து பார்த்து தான் நன்றாக இருப்பது போல் தலையை ஆட்டியுள்ளார்.

இதுபற்றிய தகவல் அக்கம் பக்கத்தில் பரவவே அனைவரும் அங்கு திரண்டனர்.  சம்பவம் பற்றி தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீசார் மற்றும் வருவாய்துறையினரும் அங்கு வந்த இளைஞரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments