நிர்பந்தம் செய்தாரா நீர்வளத்துறை அமைச்சரின் நேர்முக உதவியாளர்..? அமலாக்கத்துறை பரபரப்பு தகவல்..!

0 1715
நிர்பந்தம் செய்தாரா நீர்வளத்துறை அமைச்சரின் நேர்முக உதவியாளர்..? அமலாக்கத்துறை பரபரப்பு தகவல்..!

தங்கள் விசாரணைக்கு ஆஜராகக் கூடாது என்று நீர்வளத் துறை அதிகாரி ஒருவரை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனின் நேர்முக உதவியாளர் நிர்பந்தித்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அமலாக்கத் துறை ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு விதமாக செயல்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது.

மணல் விற்பனை முறைகேடு புகார் தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் மணல் குவாரிகள், ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் மணல் குவாரிகள் உட்பட 34 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். 2 நாட்கள் நடந்த சோதனையில், கணக்கில் வராத பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், 12.82 கோடி ரூபாய் ரொக்கம், 1,024 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.

சோதனையை தொடர்ந்து, 10 மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் முத்தையா உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பப்பட்டது. அதன் பேரில் முத்தையா, சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

மறுபுறம், தங்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக் கோரி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் முன் வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கனிம வள குற்றங்கள் தொடர்பாக மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமே தவிர, அமலக்காத்துறை நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் வாதிட்டார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் அமலாக்கத் துறை ஒவ்வொரு விதமாக செயல்படுவதாகவும், மணல் கொள்ளை பற்றி விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை என்றும் கூறிய அவர், மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங்களை கேட்டுப்பெறலாம், விசாரணைக்கு உதவும்படி கோரலாமே தவிர, சம்மன் அனுப்ப முடியாது என்றும் கூறினார்.

அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், நீர்வளத்துறை அதிகாரி ஒருவரை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக கூடாது என அமைச்சர் துரைமுருகனின் நேர்முக உதவியாளர் உமாபதி நிர்பந்தித்தித்ததாக தெரிவித்தார். விசாரணையின் போது, சட்டவிரோதமாக மிகப்பெரிய அளவில் மணல் அள்ளப்பட்டுள்ளதையும், நீர்வளத் துறைக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டும் யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் அதிகாரிகள் ஒப்புக் கொண்டதாகக் கூறி நீர்வளத்துறை அதிகாரிகள் அளித்த வாக்குமூலத்தையும் அவர் நீதிபதிகளிடம் தாக்கல் செய்தார்.

மேலதிகாரிகளின் வாய்மொழி உத்தரவுக்கு கட்டுப்படுவதை தவிர வேறு வழி தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்ததாகவும், மணல் கொள்ளையடிக்க அனுமதித்ததன் மூலம் தாங்களும் தவறு செய்து விட்டோம் என அதிகாரிகள் வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விசாரணைக்கு உதவி செய்ய கேட்பதற்கும், சம்மன் அனுப்புவதற்கும் வித்தியாசம் உள்ளது என்றும், சம்மன் அனுப்பியதில் உள்நோக்கம் இருப்பதாகவும் குறிப்பிட்ட நீதிபதிகள், அனைத்து குவாரிகளின் விவரங்களை எப்படி கேட்க முடியும்? என கேள்வி எழுப்பினர். அதற்கு அமலாக்கத் துறை வழக்கறிஞர், மோசடி, ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளதால் தான் விசாரணை நடத்தப்படுகிறது என்றும், அதை அமலாக்கத் துறை விசாரிப்பதை மாநில அரசு தடுக்க முடியாது என்றும் பதிலளித்தார்.

உடனே குறுக்கிட்ட நீதிபதிகள், அனைத்து குவாரிகளின் விவரங்களை எப்படி கேட்க முடியும் என்றும், தேவைப்படும் விவரங்களை கேட்டு தராவிட்டால் அது தொடர்பாக வழக்கு தொடரலாம் என்றும் தெரிவித்து வழக்கின் தீர்ப்பை செவ்வாயன்று வழங்குவதாக அறிவித்து ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments