இரவு மட்டும் தங்கிட்டு போறோம்.. தொழில் கடன் கட்டாததால் வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..! நடுத்தெருவில் தவித்த குடும்பம்

0 5525
இரவு மட்டும் தங்கிட்டு போறோம்.. தொழில் கடன் கட்டாததால் வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..! நடுத்தெருவில் தவித்த குடும்பம்

கோவையில் வீட்டை அடமானமாக வைத்து பெற்ற வங்கிக் கடன் நிலுவை தொகையை செலுத்தவில்லை எனக் கூறி, வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டதால், கடன் வாங்கியவர் குடும்பத்துடன் வீதியில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

கோவை சின்ன வேடம்பட்டி குட்டை தோட்டம் பகுதியில் ட்ரோமோஸ் சாப்ட் என்ற கம்பெனியை கணேஷ் ஆனந்த் என்பவர் நடத்தி வருகிறார். இவர் சிஎன்சி இயந்திரம் மற்றும் விஎம்சி இயந்திரங்கள், வால்வுகளுக்கான உதிரி பாகங்களை தயார் செய்து கொடுத்து வருகிறார்

இவர் தொழில் வளர்ச்சிக்காக கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ந்தேதி, ஆர்.பி.எல் என்ற அழைக்கப்படும் ரத்னா நகர் பேங்க் லிமிடெட் வங்கியில் , தனது தந்தை பெயரில் உள்ள வீட்டின் பத்திரத்தை அடமானமாக கொடுத்து ஒரு கோடியே 31 லட்சத்து 77 ஆயிரம் கடனாக பெற்றார். இந்த கடனுக்காக மாதாந்திர தவணைத் தொகையாக ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை 2020 மார்ச் மாதம் வரை தவறாமல் செலுத்தினார். மொத்தம் 55 லட்சத்து 83 ஆயிரம் செலுத்திய நிலையில், 2020 ஏப்ரல் முதல் கொரானாவால் முடங்கிய
கணேஷ் ஆனந்தால் கடனுக்கான தவணையை திருப்பி கட்ட முடியவில்லை.

தொழில் பாதிப்பு வந்ததால் அரசு வழங்கிய ஆறு மாத கால அவகாசம் முடிந்ததும் வங்கி அவருக்கு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டல் படி ஏற்கனவே பெற்ற கடன் தொகையில் 20 சதவீதத்தை கூடுதல் தொழில் கடனாக வழங்குவதாக கூறி,9 லட்சத்து 53 ஆயிரத்து 63 ரூபாயான அந்த தொகையை ஏற்கனவே பெற்ற கடனுக்காக வங்கியே எடுத்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.

கணேச ஆனந்த் தனது கடனை மறு சீரமைப்பு செய்து தரக் கூறிய நிலையில், வங்கியாளர்கள் அதற்கு மறுத்து அவர் மேல் சர்ஃபேசி சட்டத்தின் மூலம் அவரது அடமான சொத்தை பறிமுதல் செய்வதற்கு 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ந்தேதி முதல் நடவடிக்கை ஈடுபட்டனர். அதன் படி இரு முறை குறைந்த பட்ச தவணை தொகை செலுத்தி வங்கி நடவடிக்கையை தவிர்க்க நீதிமன்றம் வழிவகை செய்தது. அந்த பணத்தையும் கணேஷ் ஆனந்தால் செலுத்த முடியாத நிலையில் சம்பவத்தன்று வங்கி அதிகாரிகள் மாலை நேரத்தில் கணேஷ் ஆனந்தின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று வீட்டில் இருந்தவர்களை முழுமையாக வெளியேற்றினர்.

அப்போது இன்று ஒரு நாள் இரவு மட்டும் தங்கள் வீட்டில் தங்கி விட்டு செல்வதாக அவர்கள் கூறிய நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து வங்கி அதிகாரிகள் வீட்டுக்கு சீல் வைத்தனர்.

கணேஷ் ஆனந்த் மற்றும் குடும்பத்தினர் என்ன செய்வது என்று தெரியாமல் சாலையில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்

கோவை சிறு குறு தொழில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து சிறுகுறு தொழில் முனைவோர் பெற்ற கடன்களுக்காக வங்கிகள் சர்ஃபேசி சட்டத்தின் மூலம் சொத்துக்களை பறிமுதல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

வங்கிகளில் பெற்ற கடனை முறையாக செலுத்த தவறினால் சம்பந்தப்பட்டவர்கள் அடமானமாக வைத்த சொத்துக்களை இழக்க நேரிடும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments