தீபாவளிக்கு டிரெஸ் எடுக்கனும்... கணவனை அழைத்துச் சென்று உயிரை எடுத்த ‘மொபட்’மனைவி..! இனிமேல் இப்படி காதல் செய்வீர்..?

0 5143

தீபாவளிக்கு டிரெஸ் எடுக்க வேண்டும் என்று சென்னையில் இருந்து கணவரை வரவழைத்து, அரியலூர் முந்திரிக்காட்டிற்குள் வைத்து கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவியையும், காதலனையும் போலீசார் திறமையாக துப்புத்துலக்கி கைது செய்துள்ளனர். 

அரியலூர் மாவட்டம் வெண்மான்கொண்டான் வனத்துறைக்கு சொந்தமான முந்திரிக்காட்டில் மர்மமான முறையில் சடலம் ஒன்று எரிக்கப்படுவதாக உடையார் பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது

விரைந்து சென்ற போலீசார் அங்கு எரிந்து கருகிய நிலையில் கிடந்தது யார் ? என்ற கோணத்தில் விசாரணையை முன்னெடுத்தனர்.

கடந்த ஒரு வாரமாக விசாரித்த நிலையில் முந்திரிக்காட்டில் கொலை நடந்த நேரத்தில் ஒரே ஒரு செல் போன் எண் மட்டும் சிறிது நேரம் இருந்ததும் அதன் பின் சுவிட்ஜ் ஆப் செய்யப்பட்டதும் மறுநாள் அது சென்னையில் ஆன் செய்யப்பட்டதும் தெரியவந்தது.

அந்த எண் வடகடல் கிராமத்தில் இருந்து சென்னை கோயம்பேடு பூ மார்கெட்டில் தங்கி வேலைபார்த்து வந்த சுரேஷ் என்பவரின் செல்போன் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக அவரது மனைவி அனுப்பிரியாவிடம் விசாரித்த போது, தனது கணவர் சென்னையில் இருப்பதாகவும், அங்கிருந்து தனது குழந்தைகளிடம் செல்போனில் பேசியதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார் குழந்தைகளும் அப்பா தங்களுடன் பேசியதாக தெரிவித்தனர்.

இதனால் யாரையாவது கொலை செய்து விட்டு சுரேஷ் தலைமறைவாகி இருக்கலாம் ...என்ற கோணத்தில் போலீசார் விசாரித்த போலீசார், அனுப்பிரியாவின் வாட்ஸ் அப் சாட்டிங், மற்றும் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தனர்,

இதில் அவர் உறவுக்கார இளைஞர் வேல்முருகன் உடன் அதிக முறை பேசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வேல்முருகனை பிடித்து விசாரித்த போது முந்திக்காட்டு கொலைக்காண மர்மம் விலகியது.

கணவர் சுரேஷ், சென்னையில் தங்கி இருந்த நிலையில் , அனுபிரியாவுக்கு வேல்முருகன் உடன் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இவர்களது காதல் விவகாரம் தெரியவந்த நிலையில் சுரேஷ் தனது மனைவியை அடித்து உதைத்துவிட்டு சென்னைக்கு சென்றதாக கூறப்படுகின்றது.

இதனால் அவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டிய அனுப்பிரியா, சம்பவத்தன்று, தீபாவளிக்கு ஜவுளி வாங்க வேண்டும் ... இரவு பேருந்தில் புறப்பட்டு வாருங்கள்.. என்று கணவனை செல்போனில் அழைத்துள்ளார்.

கணவன் பேருந்தில் வருவதற்கு முன்பாக அதிகாலை 3 மணி அளவில் தனது மொபட்டில் காதலன் வேல்முருகனை கூட்டிச் சென்று வழியில் உள்ள முந்திரிக்காட்டில் இறக்கிவிட்ட அனுப்பிரியா, கணவரை அழைப்பதற்கு பேருந்து நிறுத்தத்திற்கு சென்றுள்ளார்.

கணவனை அழைத்துக் கொண்டு முந்திக்காட்டு சாலையில் மொபட்டில் திரும்பிய போது தனக்கு தலை சுற்றுவதாக கூறி வாந்தி எடுப்பது போல அனுப்பிரியா நாடகமாடி உள்ளார்.

அங்கு மறைந்திருந்த வேல்முருகன், சுரேஷை வெட்டிக் கொலை செய்ததாகவும், அவரது சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி முந்திரிமரக் குப்பைகளுக்குள் மறைத்து போட்டதாகவும் கூறப்படுகின்றது. சுரேஷின் செல்போனை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு வேல் முருகன், அனுப்பிரியாவுடன் வீட்டுக்கு சென்றுள்ளார்.

மறு நாள் பெட்ரோல் வாங்கிச்சென்று சாக்கு மூட்டையில் கிடந்த சுரேஷின் சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த வேல்முருகன் , சுரேஷின் செல்போனை எடுத்துக் கொண்டு பேருந்தில் சென்னை, கோயம்பேடு பூ மார்க்கெட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு செல்போனை ஆன் செய்து சுரேஷ் பேசுவது போல அனுப்பிரியாவின் குழந்தைகளிடம் குரலை மாற்றி பேசி உள்ளான்.

இதனால் குழந்தைகள் அப்பா பேசுவதாக நம்பி உள்ளனர். இதனை வைத்து போலீசாரை திசைத்திருப்பினாலும் , திறமையாக துப்புத்துலக்கிய போலீசார், கொலை வழக்கில் இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments