5 நிமிடத்துக்கு ஒரு பலி.. குண்டுகளால் அதிரும் காஸா.. 10000 வீரர்களை களமிறக்க இஸ்ரேல் அதிரடி முடிவு..!

0 3404

காஸாவை கைப்பற்றி ஹமாஸ் தலைமையை ஒழிக்க இஸ்ரேல் 10 ஆயிரம் வீரர்களை அனுப்ப முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், காஸாவை கைப்பற்றும் முடிவு மிகப்பெரிய தவறு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். இஸ்ரேல் தாக்குதலால் காஸாவில் 5 நிமிடத்துக்கு ஒரு உயிர் போவதாக தெரிவித்துள்ளது பாலஸ்தீனம்.

தொடரும் ராக்கெட் வீச்சுகள்! பல அடி உயரத்துக்கு எழும் தீப்பிழம்புகள்! இஸ்ரேல் தாக்குதலில் தெற்கு காஸாவின் பெரும்பாலான பகுதிகளில் நொறுங்கிக் வருகின்றன கட்டிடங்கள்.

காஸாவை கைப்பற்றி ஹமாஸ் தலைமையை ஒழிக்க இஸ்ரேல் 10 ஆயிரம் வீரர்களை அனுப்ப முடிவு செய்திருப்பதாக நியூ யார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

அவ்வாறு இஸ்ரேலிய வீரர்கள் புகுந்தால் காஸாவின் கீழே அமைக்கப்பட்டுள்ள சிக்கலான சுரங்கங்களை தாக்குதல் மற்றும் தற்காப்புக்கு ஹமாஸ் பயன்படுத்தும் என்றும், தங்கள் பிடியில் உள்ள பிணைக் கைதிகளை மனிதக் கேடயமாக உபயோகிக்கும் என்றும் கருதப்படுகிறது. எனவே, காஸாவை கைப்பற்றும் முடிவு பெரிய தவறு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். அதே சமயம் ஈரானும், லெபனானின் ஹிஸ்புல்லா குழுக்களும் போரில் தலையிட வேண்டாம் என்றும் வாஷிங்டன் டி.சி.யில் அளித்த பேட்டியில் பைடன் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி லெபனானில் இருந்து 9 ராக்கெட்டுகளை தங்கள் எல்லைக்குள் வீசப்பட்டதாக கூறியுள்ளது, இஸ்ரேல் ராணுவம்.

நஹரியா, ராஷ் ஹனிக்ரா, ஹனிடா, ஷ்லோமி, பெட்ஸெட் போன்ற லெபனானை ஒட்டிய இஸ்ரேலின் வடக்குப் பகுதி நகரங்களில் ராக்கெட் முன்னெச்சரிக்கை சைரன் ஒலித்தபடி உள்ளது.

ராக்கெட்டுகளை ஏவிய லெபனானின் தெற்கு பகுதியை நோக்கி வெடிகுண்டுகளை வீசி பதில் தாக்குதல் தொடுத்து வருவதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

மறுபுறம், மேற்குக் கரையில் உள்ள ஜெரிக்கோ, கிழக்கு ஜெருசலேம், நப்லஸ், பெத்லஹேம், ஹெப்ரான் உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்களை நோக்கியும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலின் போது போராளிகளுக்கு உதவி செய்த பாலஸ்தீனர்கள் 330 பேர் கைது செய்யப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

போதிய கருவிகள் இல்லாததால் இடிபாடுகளுக்கு நடுவே சிக்கி இருப்பவர்களை மீட்பது சவாலாகி இருப்பதாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த 7-ஆம் தேதியில் இருந்து இதுவரை 2450 பேர் இறந்துவிட்டதாகவும் 9 ஆயிரம் பேர் காயமடைந்திருப்பதாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒட்டுமொத்த காஸா மக்கள் தொகையில் நாலில் ஒரு பங்கு பேர் வீடுகளை இழந்து தெருவில் நிற்பதாகவும் பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது.

காஸாவுக்கு இஸ்ரேலிய படைகள் புகுந்தால் அதற்கு பிறகு ஏற்படும் சூழலையும் போர் பரவுவதையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்று ஈரான் எச்சரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments