ஆன்ட்டி ஹீரோவா ஆவின் ஊழியர்.. அடித்து தூக்கிய லவ்வர் பாய்..! காதலால் கம்பி எண்ணும் கவிதா..!

0 4147

திருவாரூர் அருகே விபத்தில் இறந்ததாக கூறப்பட்ட ஆவின் ஊழியர், மருத்துவ கல்லூரி மாணவியின் தாயை காதலித்ததால் கொலை செய்யப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அடுத்த சேந்தங்குடியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ராகுல் திருவாரூர் ஆவின் நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று மாங்குடியில் இருந்து ஆந்தக்குடி செல்லும் சாலையில் வாஞ்சியூர் சாலை ஓரத்தில் ராகுல் சடலமாக கிடந்தார். அருகில் பைக் கிடந்ததால் அவர் விபத்தில் இறந்திருக்கலாம் என்று சொல்லப்பட்டது

ராகுலை பரிசோதித்த மருத்துவர்கள் தலையில் பலத்த வெட்டுக்காயம் இருப்பதால் விபத்தில் இறந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறியதையடுத்து , ராகுலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தகாவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர்.

விசாரணையில் நாகை மாவட்டம் ஆந்தக்குடியை சேர்ந்த மருத்துவ மாணவியின் வீட்டிற்கு ராகுல் அடிக்கடி சென்று வந்ததை கண்டுபிடித்த போலீசார் அங்கிருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் பொருந்தாக்காதல் விவகாரத்தால் நிகழ்ந்த கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

திருமணமாகாத 29 வயது இளைஞரான ஆவின் ஊழியர் ராகுல், மருத்துவ மாணவியை காதலிப்பதாக ஊரே நினைத்திருக்க, அவரோ மாணவியின் தாய் கவிதாவை ரகசியமாக காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி ஆந்தக்குடி வீட்டில் சந்தித்துக் கொண்டதை கண்டு, மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த உறவுக்கார இளைஞர் நந்தா எரிச்சல் அடைந்துள்ளார். இது குறித்து கேட்டு மாணவியின் தாய் கவிதாவிடம் கேட்டு சண்டையிட்டுள்ளார். தான் விலக நினைத்தாலும் ராகுல் விட மறுப்பதாக கவிதா கூறியதால், ஆத்திரம் அடைந்த நந்தா , கடந்த 9ந்தேதி ராகுலின் வீடுதேடிச்சென்று கவிதாவுடனான காதலை கைவிடுமாறு மிரட்டி உள்ளார். ராகுலின் வயதுக்கு மீறிய காதல் விவகாரம் அறிந்து வீட்டில் உள்ளவர்களும் கண்டித்துள்ளனர்.

சொல்பேச்சு கேட்க மறுத்த ராகுல் சம்வத்தன்று கவிதாவையும் அவரது மகளையும் பைக்கில் கோவிலுக்கு அழைத்துச்சென்றதாகவும் , இருவரையும் வீட்டில் விட்டு திரும்பியதாகவும் கூறப்படுகின்றது. அப்போது கவிதா அளித்த தகவலின் பேரில் ராகுலை பின் தொடர்ந்து சென்ற நந்தா தலைமையிலான கும்பல், அவரது தலையில் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியதாகவும், இதனை மறைத்த கவிதா, ராகுல் விபத்தில் அடிபட்டு கிடப்பதாக அவரது வீட்டிற்கு தகவல் தெரிவித்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆவின் ஊழியர் ராகுல் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததாக கவிதா, கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக நந்தா, முருகேஷ், நிர்மல், மணிகண்டன், ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். வயதுக்கு மீறிய காதல் தேடி அலைந்தால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு மற்றும் ஒரு சாட்சியாகி இருக்கின்றது இந்த கொடூர கொலை சம்பவம்..!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments